Sunday, February 19, 2017

அரசியல்

பேய்கள் ஆளும் உலகமடா - இதில்
நாய்களை நரிகள் வெல்லுமடா!
பொய்யும் புரட்டும் பேசுமடா - இனி
மெய்பின் திரிபவன் மோசமடா!
வாய்கள் சொற்பல உமிழுமடா - துளி
வாய்மை இல்லா அமிலமடா!
தேயும் பிறைபோல் தேசமடா - ஈன்ற
தாயெனச் சொல்வது வேசமடா!
காயும் சருகென வாழ்க்கையடா - பிணி
நோயினில் வாடுது இதயமடா!
நீயும் நானும் முறையிட்டும் - பணம்
பாய்ந்தது பூமியின் அடிவரைக்கும்!

Wednesday, August 03, 2016

கவிதை

கவிதை எனப்படுவது யாதெனில்
கவிதையென நானுரைத்துப்
புனைவன யாவும்!

Saturday, May 07, 2016

தேர்தல் 2016 - யாருக்கு ஓட்டு ?

சம்பந்தப்பட்டவர்களுக்கு சில கேள்விகள்...

அம்மா!
1. ஐந்து வருடம் போராடியும் தடையில்லா மின்சாரம் கற்பனையாகவே இருக்கையில் விலையில்லா மின்சாரம் சாத்தியமா? அப்படியே செய்தாலும் அதனால் ஏற்படும் நஷ்டம் தடையில்லா மின்சாரம் என்பதை வெறும் கனவாகவே மாற்றி விடாதா?
2. ஆட்சிக் காலத்தில் மதுவிலக்கைப் பற்றி மூச்சு கூட விடாமல் இருந்துவிட்டு தேர்தல் என்றதும் அறிவிப்பில் மதுவிலக்கை சேர்ப்பது மக்களை ஏமாற்றும் செயலா?
3. இலவசங்களுக்கு எதிராக பலர் போர்க்கொடி தூக்கும் காலத்தில் வெறும் இலவசங்களையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருப்பது தமிழ் மக்களை அவமானப்படுத்துவது போல் ஆகாதா?
4. ஆடம்பரத் தேவைகளை இன்று இலவசமாய்ப் பெற்றால் அடிப்படைத் தேவைகளின் விலை நாளை விண்ணை நோக்கி உயரும் என்று புரிந்து கொள்ள முடியாத பாவிகள் எம்மக்கள்! ஆனால் அவர்களை ஓட்டுக்காக ஏமாற்றாமல் அவரவர் தேவைகளை அவரவரே பூர்த்தி செய்யும் அளவுக்கு வாழ்வாதாரத்தை உயற்றும் திட்டங்கள் போடுவது அரசின் கடமை அல்லவா?
ஓட்டை விலை கொடுத்து வாங்கி ஏமாற்றத்தை இலவசமாய்க் கொடுக்கும் உங்களுக்கு நாங்கள் ஏன் ஓட்டளிக்க வேண்டும்?

அய்யா!
1. அரசு மதுவிலக்கை அமல்படுத்தினால் உங்கள் கட்சியின் மது ஆலைகள் மூடப்படும் என்று வாய்ச்சவடால் பேசும் நீங்கள் மக்கள் மீது உண்மையான அக்கறையிருந்தால் ஆலைகளை மூடிவிட்டு அல்லவா பிரச்சாரத்திற்கு கிளம்பியிருக்க வேண்டும்?
2. ஆளுங்கட்சியை மேடைக்கு மேடை பதம் பார்க்கும் உங்களுக்கு நீங்கள் சொல்லும் அனைத்து குற்றங்களும் பாவங்களும் உங்கள் ஆட்சியிலும் இருந்தது என்பது கொஞ்சம் கூட உரைக்கவில்லையா?
3. தலைமை தொடங்கி கடைநிலை வரையில் நிலைமை எதுவுமே மாறாத உங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும்?
மீண்டும் உங்களுக்கு நாங்கள் ஏன் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்கு ஒரேயொரு நியாயமான காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம்?

மக்கள்!
வேறு யார் வந்து என்ன சாதிக்க போகிறார்கள் என்று யோசிக்காமல் இவ்விரு கட்சிகளை விடுத்து புதிதாய் ஒருவருக்கு வாய்ப்பளித்து நடப்பதைப் பார்க்கலாமே! எப்படியும் இவர்களால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இன்னாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பது இங்கே கோரிக்கை அல்ல... சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்! எனக்கு தெரிந்ததோர் சின்னம் இதுவே என்று மீண்டும் ஒரு குருடனாய், செவிடனாய், மூடனாய் சென்று கையிலும் முகத்திலும் கரியை பூசிக்கொள்ளாமல் இம்முறையாவது நமது வளர்ச்சியின் முத்திரையை விரலில் இட்டு வருவோம்!

Tuesday, December 08, 2015

ஒற்றுமை போற்றுவோம்!

நான் இறை நம்பிக்கை சற்றே அதிகம் படைத்த சிறுபான்மையோரில் ஒருவன். ஒரு கடவுள், இரு கடவுள் அல்ல... எழுநூறு கோடிகளுக்கும் மேலான கடவுள்களை நம்பும் ஒரு பாமரன்.

"சாதிக்கொரு கடவுள் மதத்திற்கொரு கடவுள் என்பதெல்லாம் வெறும் பேச்சு; மனிதகுலம் முழுமைக்கும் ஒரே கடவுள் என்பதும் வெட்டிப் பேச்சு; ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கடவுள்" என்பதே எம் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை உலகுக்கு உரக்கச் சொல்லிய ஒரு நிகழ்வுதான் சென்னை மழை வெள்ளம். இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் நம் மனதின் அடி ஆழத்தில் புதைந்துள்ள மனிதத்தை வெளிக்கொணர ஒரு இயற்கை பேரிடர் தேவைப்பட்டிருக்கிறது.

ஒரு துன்பம் என்றதும் எதைப் பற்றியும் சிந்தியாமல் உதவிக்கரம் நீட்ட ஓடோடிவரும் நம்மிடையே சாதாரண நாட்களில் உள்ள பிரிவினை ஏன்? மழை வெள்ளத்தில் தன்னுயிரையும் பொருட்படுத்தாது பிற உயிர் காக்க விரைந்த நாம் எதற்கும் உதவா சில பிரச்சனைகளுக்கு உயிரெடுக்கத் துணிவது ஏன்? ஒரு சில மதம் பிடித்த கூட்டங்கள் தன்னல காரணங்களுக்காக செய்யும் அரசியல் மற்றும் தீவிரவாதத்தின் விளைவால் நமக்குள் பிளவுகள் வருவது ஏன்? இதற்கெல்லாம் ஒரே காரணம் - தூண்டுதல். நாம் எளிதில் தூண்டப்பட்டு விடுகிறோம் என்பதே வருந்தத்தக்க உண்மை.

சாதிகளும் மதங்களும் மனித வாழ்க்கைக்கு அவசியமே அல்ல என்பதை மழை நமக்கு உணர்த்திவிட்டது. அரசியலின் பின்னால் ஒளிந்திருக்கும் தீவிரவாதமும் தீவிரவாதத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலுமே சாதி மதங்கள் இன்னும் அழியாமலிருக்க காரணம். இனியேனும் விழித்துக் கொள்வோம். நம்மிடையே வேற்றுமை தூண்டப்படும்போது நமக்கு உதவிக்கரம் நீட்டியோரை நினைவில் கொள்வோம். ஒற்றுமை போற்றுவோம்.

மனிதனின் வாழ்வு தன்னை மதம் கவ்வும்! மனிதமே என்றும் வெல்லும்!

Saturday, October 03, 2015

புலி - என் பார்வை

ஆகாயத்தில் தான் நட்சத்திரங்களே தவிர நட்சத்திரங்களுக்கு ஆகாயம் இல்லை. நட்சத்திர நடிகர்களுக்காக கதை மற்றும் காட்சிகள் அமைத்ததால் ஏற்பட்ட விபரீதமே இந்த புலி.

நமது டீஆர் சொன்ன பல்லாயிரம் புலிகளில் எந்தப் புலியும் இல்லாமல் வெறும் பல்லிழந்த புலியாய் இப்படம் காட்சி தருவதற்கு முதற்காரணம் இதுவே. "அட" போட வைக்கும் விஷயங்கள் சில படத்தில் இருந்தாலும் கூடவே "ஆனால்" பல போட வேண்டியிருப்பது படத்தின் பெரிய பலவீனம். அதற்காக சமூக ஊடகங்களில் கழுவி கழுவி ஊற்றும் அளவுக்கு மொத்தமாக குப்பை என்று புலியை ஒதுக்கி விடலாமா என்றால் சற்றே யோசிக்க வேண்டும். இப்படத்தை முழுக்க முழுக்க குழந்தைகள் படமாக எடுத்திருந்தால் ரசித்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

பேசும் பறவைகள், குள்ள மனிதர்கள், வேதாள உலகம் என குழந்தைகளைக் கவரும் அம்சங்கள் அதிகமாகவே உள்ளன. ஆனால் நாயகிகளின் கவர்ச்சி உடைகளும் நடனங்களும் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மேலும் இரண்டாம் பாதியில் சுத்தமாக ஃபாண்டசி படம் என்பதையே மொத்தமாக மறந்து நாயகனின் விருப்பு வெறுப்பு மற்றும் எதிர்கால திட்டங்களுக்காக காட்சிகள் மற்றும் வசனங்களை அமைத்ததில் படத்தின் தோல்வி உறுதியாகி விட்டது.

இன்றைய இயக்குனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ரசிகர்களின் ரசனை மாற்றம். தமிழ் திரைப்பட ரசிகர்கள் வெகுவாக மாறி விட்டார்கள். ஒரு படத்திற்கு சீரிய இடைவெளியில் பாடல்களும் சண்டைகளும் இனி தேவையில்லை. குத்துப் பாடல்களுக்கும் "குத்து" வசனங்களுக்கும் இனி அவசியமில்லை. அறுசுவை உணவை அரைகுறையாக படைத்தால் வெற்றி என்பது பழைய கதை. படத்தைத் தரமாக மக்களுக்கு படைக்க என்ன தேவையோ அதை செய்தால் மட்டுமே போதுமானது. இதைச் செய்வதற்கு முழுமையாக தவறிவிட்டது புலி. அதிலும் புலி வேந்தனின் குட்டி ஃப்ளாஷ்பேக் அரசியல் அபத்தம்!

இசையைப் பற்றி பேச வேண்டுமென்றால் இது இயக்குனரின் பிழையா அல்லது இசையமைப்பாளரின் பிழையா என சிந்திக்க வேண்டியுள்ளது. நமது டிஎஸ்பிக்கு ஒரேயொரு வகை இசை தான் தெரியும் போல... படத்தோடு சிறிதும் ஒட்டாத பாடல்களும் பின்னணி இசையும் படம் முழுதும் நெருடலாகவே இருக்கிறது. இதை இயக்குனராவது உணர்ந்து வேறு யாரையேனும் அணுகி இருக்கலாம்.

ஒளிப்பதிவு, வரைகலை (கிராபிக்ஸ்) காட்சிகள், தம்பி ராமையாவின் நகைச்சுவை, நட்சத்திரப் பட்டாளம் (குறிப்பாக ஸ்ரீதேவி & சுதீப்) என ரசிக்கக் கூடிய விஷயங்கள் சில நிச்சயம் இருக்கின்றன. ஆனால் முடிவில் குறைகள் நிறைகளை மறைத்து விடுகின்றன.

Wednesday, September 02, 2015

போதனை... சாதனை!

களிமண் மூளை
கற்றதன் அளவு
கைமண் என்றார்...
களவைக் கற்று
மறந்திட மறந்து
புரிந்திடும் கேடு
பெருங்கடல் அளவு!

அன்னையும் பிதாவும்
முன்னெறி தெய்வம்
தொழுதிடு என்றார்...
முதியவர் ஆயிரம்
விதியினை நொந்து
கதியென்ன புரியாது
அழுதிட விளைந்தார்!

வலக்கை அளிப்பது
இடக்கை அறிவது
இழுக்கே என்றார்...
அறிக்கை அளித்து
பகட்டை தேடாது
எச்சிற் கைகளில்
ஏழை(யை) ஓட்டார்!

மானம் போயின்
மான்போல் மாய்வர்
மானிடர் என்றார்...
மனம்போல் வாழ்தல்
மாண்பென் றானபின்
மானமும் ஈனமும்
மண்ணுக் கிரையே!

அன்பிலி எல்லாம்
என்பிலி போல
எரிவர் என்றார்...
அன்பிலி அறனிலி
பண்பிலி வாழினும்
பணமிலி மட்டுமே
பயனிலி ஆனார்!

நேர்மை நாணயம்
கண்ணியம் யாவும்
கற்றிடு என்றார்...
நன்மை தீமை
வேற்றுமை அறியா
கலியுகம் இதுவே
பிழைத்திடு வீரோ?

Tuesday, April 08, 2014

யார் தலையில் மண்?

செய்தி: யுவராஜ் வீடு தாக்கப்பட்டது!

நான்: நல்லா வேணும். ஆட்டமா ஆடினான். ஃபைனல்ல வந்து தடவிட்டு இருந்தான்.
மனசாட்சி: தம்பி... நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?
நான்: வந்துட்டியா... வேண்டாம்னா விடவா போற? கேட்டுத் தொல!
மனசாட்சி: நீ லூசு தானே!?
நான்: (அனல் பறக்க) என்ன சொன்ன?
மனசாட்சி: பின்ன என்னடா? எது எதுக்கு கல்லெடுக்கணும்னு ஒரு விவஸ்தை இல்ல!?
நான்: எத்தனை கோடி கிரிக்கெட் ஃபேன்ஸ ஏமாத்தி இருக்கான்... இதுக்கு கல்லெடுக்காம வேற எதுக்கு எடுக்கணும்?
மனசாட்சி: அட முட்டாப் பயலுகளா... இது ஒரு விளையாட்டுடா! தோக்கிறதும் ஜெயிக்கிறதும் சகஜம். இத்தனை கோடி விசிறிகள ஏமாத்திட்டான்னு குதிக்கிறீங்களே... உங்க நாட்டுல உள்ள அத்தனை கோடி பேரையும் அரசியல்வாதி போர்வையில இருந்துகிட்டு எத்தனையோ பேர் எத்தனையோ வருஷமா ஏமாத்துறாங்களே... அங்கெல்லாம் உங்களோட ஒரு கல் கூட பாயலியே... ஏன்?
நான்: (அவங்கள எல்லாம் அடிச்சா திருப்பி அடிப்பானுங்களே... அவ்வ்வ்)
மனசாட்சி: நீ பேசமாட்ட டா... நானே சொல்றேன். அங்கெல்லாம் வாலாட்ட பயம்... உங்களுக்கு செலிபிரிட்டிஸ் தான இளிச்சவாயனுங்க!
நான்: அப்படினு இல்ல... வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு மேட்ச் பார்க்கும் போது இப்படி விளையான்டா கோபம் வராதா?
மனசாட்சி: நீ வேலை வெட்டிய விட்டுட்டு மேட்ச் பார்த்தது அவர் தப்பா? இல்ல உன் கை கால்ல விழுந்து அவர் உன்ன மேட்ச் பார்க்க கூப்பிட்டாரா?
நான்: (ஆரம்பிச்சுட்டான்யா... இனி நம்மள கற்பழிக்காம விட மாட்டானே...)
மனசாட்சி: இதே யுவராஜ் ஆஸ்திரேலியா கூட அறுபது ரன் எடுத்தப்ப பல்ல இளிச்சிட்டு பார்த்த இல்ல...
நான்: ஆ... ஆ... ஆமா!
மனசாட்சி: நீங்க இங்க இருக்கிற அவங்க வீட்டுல போய் அட்டகாசம் பண்ணிட்டு இருப்பீங்க... இதையெல்லாம் மறந்துட்டு வீட்ட பத்தி கவலப்படாம அவங்க வெளிநாட்டுல போய் உங்களுக்கு எல்லா ஆட்டத்துலயும் நூறு நூறா அடிக்கனுமா?
நான்: நூறெல்லாம் வேண்டாம்... ஒரு அம்பது அறுபது போதும்.
மனசாட்சி: செருப்பால அடிப்பேன்.
நான்: ஆத்தீ...!
மனசாட்சி: தெரியாமத்தான் கேக்குறேன்... நேத்து ஒழுங்கா விளையாடலேன்னு போய் வீட்ட உடச்சுட்டீங்க... நாளைக்கே ஒரு மேட்ச் நல்லா விளையாடிட்டா உடைச்ச வீட்ட சரி பண்ணி குடுப்பீங்களா?
நான்: அது எப்படி முடியும்!!?
மனசாட்சி: பின்ன என்ன.......
நான்: ஹே... நோ பேட் வர்ட்ஸ்!
மனசாட்சி: பின்ன என்ன வெங்காயத்துக்குடா இன்னைக்கு வீட்ட உடைச்சீங்க!?
நான்: அய்யோ ராமா... நானா போய் வீட்டுல கல்லெறிஞ்சேன்?
மனசாட்சி: எறிஞ்சது சரிதான்னு சொன்ன இல்ல.
நான்: ஷ்ஷ்ஷ்.... இப்போ நான் என்ன பண்ணனும்?
மனசாட்சி: யுவராஜ் நேத்து ஒழுங்கா விளையாடாம விட்டதுல யார் தலையிலையும் மண் விழல... சொல்லப் போனா அவர் தலைல அவரே மண் போட்டுகிட்டாருன்னு வேணும்னா சொல்லலாம். ஆனா இந்த அரசியல்வாதிங்க உங்க எல்லாருக்கும் தலையில மட்டுமில்லாம கண்ணுலயும் மண்ண அள்ளி போட்டுட்டு இருக்காங்க.
நான்: ஒத்துக்கிறேன்... நீ சொல்றது அத்தனையும் சரின்னு ஒத்துக்கிறேன்.
மனசாட்சி: ஒத்துக்கிட்டா பத்தாது.... ஒன்னு... ஒவ்வொரு அரசியல்வாதி வீட்டுக்கா போய் கல் எறிங்க... இல்ல யுவராஜ் கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க.
நான்: அய்யா ராசா... அத்தனை கிரிக்கெட் ரசிகர்கள் சார்பாவும் நான் யுவராஜ் கிட்ட மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்கிறேன்... போதுமா?
மனசாட்சி: ம்ம்ம்... வேற என்ன பண்றது? போய் தொல!
நான்: (ஆள விடுறா சாமி...)