Tuesday, December 08, 2015

ஒற்றுமை போற்றுவோம்!

நான் இறை நம்பிக்கை சற்றே அதிகம் படைத்த சிறுபான்மையோரில் ஒருவன். ஒரு கடவுள், இரு கடவுள் அல்ல... எழுநூறு கோடிகளுக்கும் மேலான கடவுள்களை நம்பும் ஒரு பாமரன்.

"சாதிக்கொரு கடவுள் மதத்திற்கொரு கடவுள் என்பதெல்லாம் வெறும் பேச்சு; மனிதகுலம் முழுமைக்கும் ஒரே கடவுள் என்பதும் வெட்டிப் பேச்சு; ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கடவுள்" என்பதே எம் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை உலகுக்கு உரக்கச் சொல்லிய ஒரு நிகழ்வுதான் சென்னை மழை வெள்ளம். இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் நம் மனதின் அடி ஆழத்தில் புதைந்துள்ள மனிதத்தை வெளிக்கொணர ஒரு இயற்கை பேரிடர் தேவைப்பட்டிருக்கிறது.

ஒரு துன்பம் என்றதும் எதைப் பற்றியும் சிந்தியாமல் உதவிக்கரம் நீட்ட ஓடோடிவரும் நம்மிடையே சாதாரண நாட்களில் உள்ள பிரிவினை ஏன்? மழை வெள்ளத்தில் தன்னுயிரையும் பொருட்படுத்தாது பிற உயிர் காக்க விரைந்த நாம் எதற்கும் உதவா சில பிரச்சனைகளுக்கு உயிரெடுக்கத் துணிவது ஏன்? ஒரு சில மதம் பிடித்த கூட்டங்கள் தன்னல காரணங்களுக்காக செய்யும் அரசியல் மற்றும் தீவிரவாதத்தின் விளைவால் நமக்குள் பிளவுகள் வருவது ஏன்? இதற்கெல்லாம் ஒரே காரணம் - தூண்டுதல். நாம் எளிதில் தூண்டப்பட்டு விடுகிறோம் என்பதே வருந்தத்தக்க உண்மை.

சாதிகளும் மதங்களும் மனித வாழ்க்கைக்கு அவசியமே அல்ல என்பதை மழை நமக்கு உணர்த்திவிட்டது. அரசியலின் பின்னால் ஒளிந்திருக்கும் தீவிரவாதமும் தீவிரவாதத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலுமே சாதி மதங்கள் இன்னும் அழியாமலிருக்க காரணம். இனியேனும் விழித்துக் கொள்வோம். நம்மிடையே வேற்றுமை தூண்டப்படும்போது நமக்கு உதவிக்கரம் நீட்டியோரை நினைவில் கொள்வோம். ஒற்றுமை போற்றுவோம்.

மனிதனின் வாழ்வு தன்னை மதம் கவ்வும்! மனிதமே என்றும் வெல்லும்!

1 comment:

Unknown said...
This comment has been removed by the author.