Saturday, May 07, 2016

தேர்தல் 2016 - யாருக்கு ஓட்டு ?

சம்பந்தப்பட்டவர்களுக்கு சில கேள்விகள்...

அம்மா!
1. ஐந்து வருடம் போராடியும் தடையில்லா மின்சாரம் கற்பனையாகவே இருக்கையில் விலையில்லா மின்சாரம் சாத்தியமா? அப்படியே செய்தாலும் அதனால் ஏற்படும் நஷ்டம் தடையில்லா மின்சாரம் என்பதை வெறும் கனவாகவே மாற்றி விடாதா?
2. ஆட்சிக் காலத்தில் மதுவிலக்கைப் பற்றி மூச்சு கூட விடாமல் இருந்துவிட்டு தேர்தல் என்றதும் அறிவிப்பில் மதுவிலக்கை சேர்ப்பது மக்களை ஏமாற்றும் செயலா?
3. இலவசங்களுக்கு எதிராக பலர் போர்க்கொடி தூக்கும் காலத்தில் வெறும் இலவசங்களையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருப்பது தமிழ் மக்களை அவமானப்படுத்துவது போல் ஆகாதா?
4. ஆடம்பரத் தேவைகளை இன்று இலவசமாய்ப் பெற்றால் அடிப்படைத் தேவைகளின் விலை நாளை விண்ணை நோக்கி உயரும் என்று புரிந்து கொள்ள முடியாத பாவிகள் எம்மக்கள்! ஆனால் அவர்களை ஓட்டுக்காக ஏமாற்றாமல் அவரவர் தேவைகளை அவரவரே பூர்த்தி செய்யும் அளவுக்கு வாழ்வாதாரத்தை உயற்றும் திட்டங்கள் போடுவது அரசின் கடமை அல்லவா?
ஓட்டை விலை கொடுத்து வாங்கி ஏமாற்றத்தை இலவசமாய்க் கொடுக்கும் உங்களுக்கு நாங்கள் ஏன் ஓட்டளிக்க வேண்டும்?

அய்யா!
1. அரசு மதுவிலக்கை அமல்படுத்தினால் உங்கள் கட்சியின் மது ஆலைகள் மூடப்படும் என்று வாய்ச்சவடால் பேசும் நீங்கள் மக்கள் மீது உண்மையான அக்கறையிருந்தால் ஆலைகளை மூடிவிட்டு அல்லவா பிரச்சாரத்திற்கு கிளம்பியிருக்க வேண்டும்?
2. ஆளுங்கட்சியை மேடைக்கு மேடை பதம் பார்க்கும் உங்களுக்கு நீங்கள் சொல்லும் அனைத்து குற்றங்களும் பாவங்களும் உங்கள் ஆட்சியிலும் இருந்தது என்பது கொஞ்சம் கூட உரைக்கவில்லையா?
3. தலைமை தொடங்கி கடைநிலை வரையில் நிலைமை எதுவுமே மாறாத உங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும்?
மீண்டும் உங்களுக்கு நாங்கள் ஏன் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்கு ஒரேயொரு நியாயமான காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம்?

மக்கள்!
வேறு யார் வந்து என்ன சாதிக்க போகிறார்கள் என்று யோசிக்காமல் இவ்விரு கட்சிகளை விடுத்து புதிதாய் ஒருவருக்கு வாய்ப்பளித்து நடப்பதைப் பார்க்கலாமே! எப்படியும் இவர்களால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இன்னாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பது இங்கே கோரிக்கை அல்ல... சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்! எனக்கு தெரிந்ததோர் சின்னம் இதுவே என்று மீண்டும் ஒரு குருடனாய், செவிடனாய், மூடனாய் சென்று கையிலும் முகத்திலும் கரியை பூசிக்கொள்ளாமல் இம்முறையாவது நமது வளர்ச்சியின் முத்திரையை விரலில் இட்டு வருவோம்!

No comments: