Saturday, October 03, 2015

புலி - என் பார்வை

ஆகாயத்தில் தான் நட்சத்திரங்களே தவிர நட்சத்திரங்களுக்கு ஆகாயம் இல்லை. நட்சத்திர நடிகர்களுக்காக கதை மற்றும் காட்சிகள் அமைத்ததால் ஏற்பட்ட விபரீதமே இந்த புலி.

நமது டீஆர் சொன்ன பல்லாயிரம் புலிகளில் எந்தப் புலியும் இல்லாமல் வெறும் பல்லிழந்த புலியாய் இப்படம் காட்சி தருவதற்கு முதற்காரணம் இதுவே. "அட" போட வைக்கும் விஷயங்கள் சில படத்தில் இருந்தாலும் கூடவே "ஆனால்" பல போட வேண்டியிருப்பது படத்தின் பெரிய பலவீனம். அதற்காக சமூக ஊடகங்களில் கழுவி கழுவி ஊற்றும் அளவுக்கு மொத்தமாக குப்பை என்று புலியை ஒதுக்கி விடலாமா என்றால் சற்றே யோசிக்க வேண்டும். இப்படத்தை முழுக்க முழுக்க குழந்தைகள் படமாக எடுத்திருந்தால் ரசித்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

பேசும் பறவைகள், குள்ள மனிதர்கள், வேதாள உலகம் என குழந்தைகளைக் கவரும் அம்சங்கள் அதிகமாகவே உள்ளன. ஆனால் நாயகிகளின் கவர்ச்சி உடைகளும் நடனங்களும் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மேலும் இரண்டாம் பாதியில் சுத்தமாக ஃபாண்டசி படம் என்பதையே மொத்தமாக மறந்து நாயகனின் விருப்பு வெறுப்பு மற்றும் எதிர்கால திட்டங்களுக்காக காட்சிகள் மற்றும் வசனங்களை அமைத்ததில் படத்தின் தோல்வி உறுதியாகி விட்டது.

இன்றைய இயக்குனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ரசிகர்களின் ரசனை மாற்றம். தமிழ் திரைப்பட ரசிகர்கள் வெகுவாக மாறி விட்டார்கள். ஒரு படத்திற்கு சீரிய இடைவெளியில் பாடல்களும் சண்டைகளும் இனி தேவையில்லை. குத்துப் பாடல்களுக்கும் "குத்து" வசனங்களுக்கும் இனி அவசியமில்லை. அறுசுவை உணவை அரைகுறையாக படைத்தால் வெற்றி என்பது பழைய கதை. படத்தைத் தரமாக மக்களுக்கு படைக்க என்ன தேவையோ அதை செய்தால் மட்டுமே போதுமானது. இதைச் செய்வதற்கு முழுமையாக தவறிவிட்டது புலி. அதிலும் புலி வேந்தனின் குட்டி ஃப்ளாஷ்பேக் அரசியல் அபத்தம்!

இசையைப் பற்றி பேச வேண்டுமென்றால் இது இயக்குனரின் பிழையா அல்லது இசையமைப்பாளரின் பிழையா என சிந்திக்க வேண்டியுள்ளது. நமது டிஎஸ்பிக்கு ஒரேயொரு வகை இசை தான் தெரியும் போல... படத்தோடு சிறிதும் ஒட்டாத பாடல்களும் பின்னணி இசையும் படம் முழுதும் நெருடலாகவே இருக்கிறது. இதை இயக்குனராவது உணர்ந்து வேறு யாரையேனும் அணுகி இருக்கலாம்.

ஒளிப்பதிவு, வரைகலை (கிராபிக்ஸ்) காட்சிகள், தம்பி ராமையாவின் நகைச்சுவை, நட்சத்திரப் பட்டாளம் (குறிப்பாக ஸ்ரீதேவி & சுதீப்) என ரசிக்கக் கூடிய விஷயங்கள் சில நிச்சயம் இருக்கின்றன. ஆனால் முடிவில் குறைகள் நிறைகளை மறைத்து விடுகின்றன.

No comments: