Wednesday, September 02, 2015

போதனை... சாதனை!

களிமண் மூளை
கற்றதன் அளவு
கைமண் என்றார்...
களவைக் கற்று
மறந்திட மறந்து
புரிந்திடும் கேடு
பெருங்கடல் அளவு!

அன்னையும் பிதாவும்
முன்னெறி தெய்வம்
தொழுதிடு என்றார்...
முதியவர் ஆயிரம்
விதியினை நொந்து
கதியென்ன புரியாது
அழுதிட விளைந்தார்!

வலக்கை அளிப்பது
இடக்கை அறிவது
இழுக்கே என்றார்...
அறிக்கை அளித்து
பகட்டை தேடாது
எச்சிற் கைகளில்
ஏழை(யை) ஓட்டார்!

மானம் போயின்
மான்போல் மாய்வர்
மானிடர் என்றார்...
மனம்போல் வாழ்தல்
மாண்பென் றானபின்
மானமும் ஈனமும்
மண்ணுக் கிரையே!

அன்பிலி எல்லாம்
என்பிலி போல
எரிவர் என்றார்...
அன்பிலி அறனிலி
பண்பிலி வாழினும்
பணமிலி மட்டுமே
பயனிலி ஆனார்!

நேர்மை நாணயம்
கண்ணியம் யாவும்
கற்றிடு என்றார்...
நன்மை தீமை
வேற்றுமை அறியா
கலியுகம் இதுவே
பிழைத்திடு வீரோ?

No comments: