Wednesday, March 12, 2014

ஞாபகம் - பாகம் IV

முந்தைய பாகம்


காவலன் தவறவிட்ட துப்பாக்கியை தற்காப்புக்காக எடுத்துக்கொள்ள எத்தனித்து மரத்தை விட்டு இறங்கத் தொடங்கினேன். அப்பொழுது தூரத்தில் ஒரு குரல்... யாரோ ஒருவன் யாரையோ அழைக்கும் குரல் கேட்கிறது. நொடிகள் செல்லச் செல்ல அந்தக் குரல் என்னை நோக்கியே முன்னேறி வருகிறது. "சுரா... சுரா..." என்றழைக்கும் அந்தக் குரலில் ஒரு கவலை தெரிகிறது. அதை விட முக்கியமாக அது எனக்கு பரிச்சயமான குரலாகத் தெரிகிறது. இறுதியாக அந்தக் குரல் "டேய் சுரேந்தர்... எங்கடா இருக்க?" என்று தன் அடிவயிற்றிலிருந்து கத்த ஒரு மின்னல் சென்று என் மூளையைத் தாக்கியது. என் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் வேகம் பிடிப்பதை என்னால் உணர முடிகிறது. ஆம்... அந்தக் குரல் யாரையோ அழைக்கவில்லை... என்னைத் தான் அழைக்கிறது. எனது பெயர் தான் சுரேந்தர். மொத்தமாக இருண்டு கிடந்த என் மூளைக்குள் ஒரு சிறு வெளிச்சம் வரத் தொடங்கியது. உதவி என்னைத் தேடி வருவதை என்னால் உணர முடிகிறது. நிச்சயமாக வருகிறவன் எனது கூட்டத்தைச் சேர்ந்தவனாகத் தான் இருக்க வேண்டும்.

ஆனால் அதே நேரம் காவல்படை எங்களைத் தேடி இதே காட்டுக்குள் அலைந்து கொண்டிருப்பது என்னைத் தேடி வரும் தோழனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. தெரிந்திருந்தால் இப்படி சத்தம் போட்டுக்கொண்டு வரமாட்டான். அவனை உடனடியாக சென்றடைந்து எச்சரிக்கை செய்தாக வேண்டும் என்றெண்ணிக் கொண்டே மரத்திலிருந்து இறங்குகிறேன். இறங்கிக் கொண்டிருக்கும் போதே நண்பன் என்னைப் பார்த்துவிட்டு சுரா என்றழைத்துக்கொண்டே ஓடி வருகிறான்.
"மச்சான்... எங்கடா தொலஞ்சு போன? உன்ன நம்ம ஆலமரத்தடில தான விட்டுட்டு போனேன்."
"ஷ்ஷ்ஷ்... கத்தாத... சுத்தி போலீஸ் இருக்கு"
"போலீசா... என்னடா சொல்ற?"
"ஆமா... காடு முழுக்க நம்மள தேடி அலஞ்சுட்டு இருக்காங்க"
"போலீஸ் நம்மள....."
"எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு கேக்குறியா? எனக்கு தெரில"
"இல்லடா... போலீஸ் நம்மள எதுக்கு கண்டுபிடிக்கனும்னு கேக்குறேன்"
"இங்க பாரு... நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளு"
"சரி சொல்லு"
"எனக்கு தலைல அடி பட்டிருக்கு... நான் மயங்கிக் கிடந்தேன்... மயக்கம் தெளிஞ்சு பாக்கும் போது ஒரு மரத்தடில இருந்தேன்"
"ஆமா... உனக்கு தலைல அடி பட்டிருக்கு... நீ மயங்கி விழுந்த... நான் தான் உன்ன அந்த மரத்தடில விட்டுட்டு போனேன். அதுக்கு என்ன இப்போ?"
"ஹே... அப்போ உனக்கு என்ன அட்டாக் பண்ணது யாருன்னு தெரியுமா?"
"அட்டாக்கா... உனக்கு என்னடா ஆச்சு? முதல்ல ஏன் இவ்ளோ சீரியசா இருக்க?"
"அய்யோ..... எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல. அடி பட்ட அதிர்ச்சில எல்லாமே மறந்துடுச்சு. உன் பேர் கூட எனக்கு ஞாபகம் இல்ல... நீ சொன்னதுக்கு அப்புறம் தான் என் பேரு சுரெந்தர்னே எனக்கு ஞாபகம் வந்துச்சு"
"!!!!????"
"யார் என்ன அடிச்சு போட்டா... எதுக்கு என்னை போலீஸ் துரத்துது... எதுவுமே எனக்கு புரியல"
"இப்போ தான் எனக்கு புரியுது"
"என்ன புரியுது? சொல்லு ப்ளீஸ்... நாம எல்லாம் யாரு? நம்ம எந்த கூட்டத்த சேர்ந்தவங்க? நாம இப்போ என்ன பண்ணிட்டு இருக்கோம்? போலீஸ் ஏன் நம்மள தேடுது?"
"சொல்றேன் மச்சி... நல்லா கேட்டுக்கோ"
"சீக்கிரம் சொல்லு"
"நாம எல்லாம் ஃப்ரென்ட்ஸ்... நம்ம உருப்படாத கூட்டத்த சேர்ந்தவங்க... நாம இப்போ மட்டுமில்ல... எப்பவுமே ஊர் பொறுக்கிட்டு தான் இருப்போம்"
"?????"
"இதுல எனக்கு புரியாத விஷயம் ஒன்னே ஒன்னுதான்... ஊர் பொறுக்கினதுக்கு போய் ஏன் போலீஸ் துரத்துதுன்னு தான் புரியல"
எனக்கு எதுவுமே விளங்கவில்லை. தலையில் அடிபட்ட காட்சி மீண்டும் ஒருமுறை வந்து போகிறது.
"அப்போ எனக்கு எப்படி அடி பட்டுச்சு? யார் என்ன அடிச்சா? என் தலைல ஏதோ இடி விழுந்தா மாதிரி இருக்கே"
"உன் தலைல விழுந்தது இடி இல்ல மச்சி... தேங்கா!"
"தேங்காயா... என்னடா சொல்ற?"
"நாம வழக்கம்போல ஊர் சுத்திட்டு இருந்தப்போ அப்டியே பக்கத்துல இருக்கிற தென்னந்தோப்புக்கு போனோம்..."
நான் சற்று நேரத்திற்கு முன்பு பார்த்த தோப்பு நினைவுக்கு வந்தது.
"... அங்க சுத்திட்டு இருந்தப்போ தரையில கிடந்த ரெண்டு ரூவா காயின எடுக்கிறதுக்கு நீ கீழ குனிஞ்ச... அந்த நேரம் பார்த்து கரெக்டா உன் பின்னந்தலைல ஒரு தேங்கா நச்சுனு வந்து விழுந்துச்சு..."
தலையில் அடிபட்ட காட்சி மறுபடி மனக்கண்ணில் வருகிறது. ஆனால் இம்முறை அதற்கு எப்படி ரியாக்ட் செய்வதென்று தெரியாமல் திருதிருவென முழிக்கிறேன்.
"... அடிபட்ட வேகத்துல நீ அப்டியே மயங்கி கீழ விழுந்துட்ட. எனக்கு என்ன பண்றதுன்னே புரியல. சரி... கைத்தாங்கலா ஊருக்குள்ள தூக்கிட்டு போயிடலாம்னு இந்த காட்டு வழியா கூட்டிட்டு வந்தேன். ஒரு அளவுக்கு மேல என்னால முடியல. சரின்னு உன்ன அந்த ஆலமரத்தடில விட்டுட்டு உதவிக்கு யாரையாச்சும் கூப்பிட்டு வரலாம்னு போனேன். நம்ம பசங்க யாரும் கண்ணுல படல. இதுக்கு மேல விட்டா இருட்டிடும்... நம்மளே கஷ்டப்பட்டு தூக்கிட்டு போயிடலாம்னு ரிடர்ன் வந்து பாத்தா உன்ன காணோம். அதான் அப்படியே தேடிட்டு வர்றேன். நீ என்னடான்னா இங்க நின்னு ஏதோ காமெடி பண்ணிட்டு இருக்க"
கடந்த அரை மணி நேரத்தில் நான் செய்த விஷயங்கலெல்லாம் மூளைக்குள் ஒரு ஹைலைட்ஸ் போல ஒடுகிறது. அதை நினைத்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
"ஒரு தேங்கா விழுந்ததுக்கா இப்படி எல்லாமே எனக்கு மறந்து போயிடுச்சு"
"கவலப்படாத மச்சி... போன வாரம் ஒரு படம் பார்த்தேன். அந்த படத்தோட ஹீரோக்கு தலைல இதே இடத்துல தான் அடிபடும். அவரும் உன்ன மாதிரியே எல்லாத்தையும் மறந்துடுவாரு. ஏன்னா... அந்த இடத்துல தான் மெடுல்லா ஆப்லங்கேட்டா இருக்கு. அங்க அடிபட்டா ஷாக்ல temporary memory loss வரும். கொஞ்ச நேரத்துல அதுவே சரி ஆயிடும்."
கடுப்பில் நண்பனை நான் முறைக்க அவன் சிரித்துக்கொண்டே என் முதுகில் தட்டிக் கொடுக்கிறான்.
"வா... எதுக்கும் போய் ஒரு டாக்டர பார்த்துடலாம்"

ஒரு ரெண்டு ரூபாய்க்கு ஆசைப்பட்டு என்னென்னமோ நடந்துவிட்டதை எண்ணி நொந்துகொண்டே நண்பனுடன் செல்கிறேன். காட்டை விட்டு வெளியே வந்ததும் அங்கே ஒரே களேபரமாக இருப்பதை பார்க்கிறோம். காவல்படை உண்மையில் தேடிக் கொண்டிருந்த ஆள் மாட்டிக்கொண்டான் போலும். யாரோ ஒருவனைக் கைது செய்து போலீஸ் வேனை நோக்கி இழுத்துச் செல்கின்றனர். அதில் ஒரு போலீஸ்காரர் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே செல்கிறார். ஆம்... சிறிது நேரத்திற்கு முன்பு காட்டிற்குள் என்னைப் பார்த்து ஓடி விடு என்று சைகை காட்டிய அதே போலீஸ்காரர் தான். அந்தக் காட்சி மறுபடி மனதில் ஓட, இப்பொழுது தான் உண்மையில் அவர் ஏன் கோபப்பட்டார் என்பது புரிகிறது. "யாரும் பார்ப்பதற்குள் ஓடி விடு" என்று சொல்லவில்லை. "வேலை நேரத்துல இவன் யாருடா குறுக்க... அடச்சீ போ" என்று தான் நினைத்திருந்திருக்க வேண்டும். வெட்கம் என்னைப் பிடுங்கித் திங்க என் நண்பனைப் பார்க்கிறேன். அவனும் சிரித்துக்கொண்டே "ஆல் இன் தி கேம்" என்று கூறி என் தோளில் கை போட்டு அழைத்துச் செல்கிறான்.

நான் திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவன் போல் நண்பனைப் பார்த்து கேட்கிறேன்,
"மச்சி... இன்னும் உன் பேர் என்னனு நீ சொல்லவே இல்லியே"
"ம்ம்ம்... விட்டுத் தள்ளு... உனக்கு குணமாகுற வரைக்கும் நான் மச்சியாவே இருந்துட்டு போறேன்"

சிரித்துக்கொண்டே நண்பன் அழைத்துச் செல்லும் பாதையில் செல்கிறேன்.

--- முற்றும்


எனது முந்தைய கதை முயற்சியைக் காண இங்கே அழுத்தவும்...

3 comments:

Aksharaa Luxman said...

Nice writing Sankar! Impressed as uaual

Aksharaa Luxman said...

Nice writing Sankar! Impressed as uaual

Shanmughapriya Balasubramanian said...

Sankar, bayangara thriller maadhiri arambhichu kadisila sirikka vachuteenga as usual :) :)..Nice write up..