Tuesday, August 10, 2010

மந்திரப் பெட்டி - 1

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்… ஒரு நாள்… அந்திப் பொழுது!

பரந்து விரிந்த வனம்… நன்கு ஓங்கி உயர்ந்த மரங்களும் செடி கொடிகளும் புற்களும் வனத்தின் அடர்த்தியை பறைசாற்றிய படி நின்றன.பகலிலேயே இருண்டு கிடக்கும் இவ்வனம் இரவு நெருங்குகையில் பார்ப்பதற்கு சற்றே அச்சமளிப்பதாகவே இருந்தது. குறுக்கும் நெடுக்குமாக பறந்து கொண்டிருந்த வவ்வால்களும் அவ்வப்பொழுது கேட்ட ஆந்தைகளின் அலறல்களும் வன விலங்குகளின் கூச்சல்களும் எரியும் அச்சத்தில் எண்ணை ஊற்றின. மற்றபடி இரவு நேர பூச்சிகளின் ரீங்காரத்தை தவிர வேறு சப்தங்களின்றி அவ்வனத்தைப் போலவே அமைதியும் பரவி இருந்தது.

யாருமற்ற வனத்தில் யாரை முறைப்பதென்று தெரியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆந்தை ஒன்று திடீரென்று மெல்லிய ஒலியொன்று கேட்க சுற்றும் முற்றும் பார்த்தது. குதிரைகளின் குளம்படி ஓசை அது. நொடிகள் பெருகப் பெருக சத்தமும் பெருகிக் கொண்டே வந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் வனத்தின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு வெண்புரவிகள் இரண்டு கடந்து சென்றன. அப்புரவிகளின் அகண்ட தலைப்பகுதியும் நீண்ட வாலும் அவைகளை அரேபியக் குதிரைகளாக அடையாளம் காட்டின. பாதை இல்லாத காட்டில் மிக லாவகமாக கற்களையும் முட்களையும் கடந்து விரைந்து சென்றன புரவிகள் இரண்டும். அது குதிரைகளின் திறமையால் மட்டுமல்ல… அவற்றை செலுத்திய வீரர்களின் திறமையும் மெச்சப்பட வேண்டும்.

சிறிது தூர பயணத்திற்கு பின் புரவிகளின் வேகம் குறைந்தது. வீரர்கள் இருவருக்கும் சம்பாஷணை தொடங்கியது.
“நகுலா!”
“சொல் தீரா…”
“அதோ அந்த பள்ளத்தில் ஒரு விளக்கொளி தெரிகிறதே… அங்கு தான் நாம் செல்ல வேண்டும்.”

தீரன் காட்டிய திக்கில் குடில் ஒன்று மங்கலாகத் தெரிந்தது. உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்கொளியில் ஆள் நடமாட்டம் இருப்பதும் புலப்பட்டது. இத்தகைய அடர்ந்த காட்டில் குடில் அமைத்து தனியே தங்கிக் கொண்டிருப்பவருக்கு நெஞ்சுரம் மிதமிஞ்சியே இருக்கவேண்டும்.

சுத்தமான குடிலும் அதைச் சுற்றி அமைந்திருந்த தோட்டமும் மங்கலான வெளிச்சத்திலும் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. அத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த புள்ளி மான்கள் இரண்டு குதிரைகளின் குழம்படி ஓசை கேட்டு மிரண்டு மின்னலெனப் பாய்ந்து புதருக்குள் சென்று மறைந்தன. நகுலனும் தீரனும் தங்கள் புரவிகளை குடிலுக்கு வெளியே நிறுத்தி விட்டு வாசலை நோக்கி நடந்தனர்.

சத்தம் கேட்டு குடிலை விட்டு வெளியே வந்த சீடனிடம் நகுலன், “குருவை சந்திக்க வேண்டும். மன்னர் அனுப்பியதாகக் கூறுங்கள்” என்றான்.
“குரு தியானத்தில் இருக்கிறார். சற்று நேரம் காத்திருங்கள். தியானம் முடிந்ததும் வந்து அழைத்துச் செல்கிறேன்.” என்றான் சீடன்.
நகுலனும் தீரனும் திண்ணையில் அமர்ந்தனர்.

தியானத்தில் இருக்கும் குருவின் பெயர் கொடுமுடியான். முல்லைப்பந்தல் சிற்றரசின் கீழுள்ள வனத்தில் வசிக்கும் ஒரு பெரிய மந்திரவாதி. முல்லைப்பந்தலின் மன்னன் முல்லை வேந்தனுக்கு “பல விதங்களில்” உதவி புரிந்து வந்ததால் நாட்டு மக்களும் அரசு பணியாளர்களும் மன்னனுக்கு கொடுக்கும் மரியாதையை கொடுமுடியானுக்கும் கொடுக்க வேண்டுமென்பது அரசகட்டளை. மரியாதை இருக்கிறதோ இல்லையோ… மக்களுக்கு இவன் மேல் மிகுந்த பயம் இருந்தது. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை… கொடுமுடியானின் மந்திர சக்தி அப்படி.

உள்ளே சென்ற சீடன் ஒரு நாழிகை கழித்து வெளியே வந்து இருவரையும் உள்ளே வருமாறு அழைத்தான். குடிலின் வெளித் தோற்றத்திற்கு சிறிதும் சம்பந்தமின்றி உட்புறம் அப்படியொரு கோரக்காட்சி அளித்தது. சுற்றிலும் மண்டை ஓடுகள்… தரை எங்கும் சிந்தி இருந்த சாம்பல் மற்றும் பிறபூஜைப் பொருட்கள்… குடிலின் நடுவே யாகம் வளர்க்க வெட்டப்பட்ட குழி… அனைத்திற்கும் மேலாக ஆங்காங்கே தெரித்திருந்த பலியிடப்பட்ட விலங்குகளின் (சமயத்தில் மனிதர்களும்) உறைந்த குருதித் துளிகள்! போர் வீரர்களான நகுலனுக்கும் தீரனுக்கும் கூட அந்தக் காட்சி மயிர்க்கூச்செறியச் செய்தது. நிதானித்துக் கொண்டு இருவரும் கொடுமுடியானுக்கு தங்கள் வணக்கங்களைச் செலுத்தினர். பின்னர் தீரன் தன் கச்சிலிருந்து ஓலைச் சுவடி ஒன்றை எடுத்து கொடுமுடியானிடம் கொடுத்தான்.

முல்லை வேந்தன் கொடுமுடியானுக்கு வரைந்திருந்த அவ்வோலையில்,
“மதிப்பிற்குரிய குருவிற்கு முல்லை வேந்தனின் வந்தனம்.
இந்த ஓலையைக் கொண்டு வரும் நகுலனும் தீரனும் என் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். தாங்கள் எவ்வித ஐயமும் இன்றி இவர்களிடம் மந்திரப் பெட்டியைக் கொடுத்து அனுப்பலாம்.” என்று எழுதி அரசு முத்திரையும் பதிக்கப்பட்டு இருந்தது. அதைப் படித்து விட்டு கொடுமுடியான் நிமிர்ந்து இருவரையும் பார்த்தான். தீரன் பேசத் தொடங்கினான்.
“எனது பெயர் தீரன். இவன் நகுலன்.”
“நல்லது. மன்னரின் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்றால்… தாங்கள் வந்துள்ள காரியம் பற்றி முழுமையும் அறிவீர்களா?” – கொடுமுடியான்.
நகுலன் தொடர்ந்தான், “மந்திரப் பெட்டியின் பயனைப் பற்றி அறிவோம். ஆனால் எதற்காக மன்னர் இந்த ஏற்பாடு செய்கிறார் என்பது பற்றி நாங்கள் அறியோம்.”
“அது நானும் மன்னனும் மட்டுமே அறிந்த ராஜ ரகசியம். அதை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அறிந்து கொள்ள ஆசைப்பட்டால் கூட உங்கள் சிரம் சின்னாபின்னாமாகி விடும்.” என்று கூறி கொடுமுடியான் நிமிர்ந்து பார்க்க “புரிகிறது!” என்பது போல் இருவரும் தலையசைத்தனர்.

அவர்கள் சம்பாஷணையை தொடரும் முன் மந்திரப் பெட்டியின் காரண காரியத்தை அறிந்து கொள்வோம். இந்த மந்திரப் பெட்டியின் முக்கிய குறிக்கோளே அழிவு தான்! ஏதோ ஒரு பெரிய திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டே முல்லை வேந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க கொடுமுடியான் இந்த மந்திரப் பெட்டியை செய்துள்ளான். கொடுமுடியானின் மந்திர சக்தியின் உதவியினால் விற்போர், வாட்போர், மற்போர் என எப்போரும் புரியாமல் “கத்தியின்றி ரத்தமின்றி” ஒரு பெரிய நிலப் பரப்பை புல் பூண்டு முளைக்கக் கூட வகை இல்லாமல் செய்து விடவே இந்தப் பெட்டி!

கொடுமுடியான் மந்திரப் பெட்டியை எடுத்து நகுலன் மற்றும் தீரனிடம் காட்டினான். பொன்னிறத்தில் மின்னிய அந்தப் பெட்டி அவர்கள் எண்ணியதை விட சற்று பெரிதாகவே இருந்தது. ஓரடிக்கு மேல் நீளமும் ஐந்தாறு அங்குல அகலமும் பெற்றிருந்த அப்பெட்டி விளக்கொளியின் வெளிச்சத்தில் காண்பவரின் கண்களுக்கு ஜாலம் காட்டியது. பிரமிப்பின் மிகுதியில் இருந்த இருவருக்கும் கொடுமுடியான் மந்திரப் பெட்டியை உபயோகிக்கும் முறையை விளக்கத் தொடங்கினான்.
“இந்தப் பெட்டியை குறிப்பிட்ட இடத்தில் வைத்து திறந்து கதிரவன் ஒளி இதன் மேல் படும்படி வைத்தால் சில நொடிகளில் இதனுள்ளே நான் செதுக்கியுள்ள மந்திரம் கண்களுக்கு புலப்படும். அதை வாய்விட்டு மும்முறை ஜபித்தால் இப்பெட்டி அவ்விடத்திலிருந்து மாயமாய் மறைந்துவிடும். மறைந்த மறு நொடி அவ்விடத்தில் அழிவு தொடங்கும். நம் மன்னரின் வெற்றியும் தொடங்கும்!!!” – இதை சொல்லும் பொழுது கொடுமுடியானின் கண்களில் கொலை வெறி தாண்டவமாடியது. அவன் ஆனந்தத்தின் எல்லையில் அந்தக் காடே அதிர்ந்து போகும்படி சிரித்த சத்தமும் அவனது கறை படிந்த கோரப்பற்களும் நகுலனுக்கும் தீரனுக்கும் உள்ளுக்குள் பீதியைக் கிளப்பின.
கொடுமுடியான் தொடர்ந்தான், “இந்த மந்திரப் பெட்டி தற்சமயம் சில காத தூர சுற்றளவை அழிக்கும் சக்தி மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் இதன் சக்தி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகும். மன்னனின் திட்டம் முழு வெற்றி பெற வேண்டுமென்றால் இதை இன்றிலிருந்து சரியாக முப்பது நாட்கள் கழித்து உபயோகப் படுத்த வேண்டும்.”
நகுலன் இடைமறித்தான், “நாளுக்கு நாள் இதன் சக்தி பெருகும் என்றால் இதை மன்னர் உபயோகப்படுத்தத் தவறி விட்டால் என்ன ஆகும்?”
கொடுமுடியான், “இப்பெட்டியை உபயோகப்படுத்தும் முடிவை கைவிட்டாலோ அல்லது காலம் கடத்தி உபயோகிக்க நினைத்தாலோ சிறிதும் தாமதமின்றி இதை என்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அப்படியே விட்டு விட்டால் இன்னும் ஒரு வருட காலத்திற்குள் இவ்வுலகையே அழிக்கும் சக்தியை இது பெற்று விடும்.”
தீரன் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “குருவே, எதற்காக இந்த விஷப் பரிட்சை?” என்று கேட்டான்.
கொடுமுடியான் கோபக்கனல் தெறிக்க தீரனைப் பார்த்து, “மூடனே! சொல்வதை மட்டும் செய். என்னை கேள்வி கேட்காதே.” எனக் கூவ நகுலனுக்கும் தீரனுக்கும் சப்த நாடியும் அடங்கியது. அமைதியாக மந்திரப் பெட்டியை வாங்கி தீரன் தன் இடைக்கச்சில் சொருகிக்கொண்டான்.பின்னர் கொடுமுடியானிடம் விடை பெற்றுக் கொண்டு இருவரும் அரண்மனை நோக்கி கிளம்பினர். அவர்கள் கிளம்பிய நேரம் நன்றாக இருள் சூழ்ந்து கொண்டது. இருவரும் கையில் தீப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டு மெதுவாக புரவிகளை நடத்திச் சென்றனர்.

இருவரும் அமைதியாக சென்று கொண்டிருந்தனர். வனத்தைக் கடந்து ஒரு ஆற்றங்கரையை அடைந்ததும் புரவிகளை விட்டு இறங்கி மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள். இரவின் கருமை அப்பியிருந்த நீர்ப்பரப்பில் பிறை நிலவின் பிம்பம் அழகாக பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதை ரசிக்கும் மன நிலையில் இருவருமே இல்லை. அவர்கள் மனதில் குழப்பம் நிறைந்து இருந்தது. என்னன்னவோ எண்ணங்கள் வந்து அவர்கள் உள்ளத்தின் அமைதியை கெடுத்துக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு பெரிய ஆபத்து தங்களை சூழ்ந்து கொள்ளப் போவது போன்றதொரு எண்ணம் அவர்களை உறுத்திக் கொண்டே இருந்தது. இப்பெட்டியை மன்னரிடம் கொண்டு சேர்ப்பது சரியா என்று யோசிக்கத் தொடங்கினான் நகுலன். தீரனையும் நேரடியாகவே கேட்டு விட்டான்.
“தீரா, நாம் இதை மன்னரிடம் கொண்டு சேர்ப்பது எனக்கு நல்லதெனத் தோன்றவில்லை. உலகத்தின் அழிவு நம் மூலமாக தொடங்கி விடுமென உள்மனது உறுத்துகிறது.”
“எனக்கும் அதே எண்ணம் தான் நகுலா. ஆனால் இப்போது நமக்கு வேறு வழியே இல்லையே.”
“ஏன் இப்படிச் சொல்கிறாய்?”
“சிந்தித்துப் பார். இப்பெட்டியினால் ஏற்படப் போகும் அழிவினைத் தடுக்க கொடுமுடியானால் மட்டுமே முடியும். நாம் இதை எங்கு ஒளித்து வைத்தாலும் கொடுமுடியான் தன் மந்திர சக்தி கொண்டு சுலபமாகக் கண்டுபிடித்து விடுவான். அப்படியே அவன் கண்டுபிடிக்கத் தவறினாலும் சில வருடங்கள் கழித்து இதை யாரேனும் கண்டெடுத்தால் அந்த நேரத்தில் அழிவு மிகப் பெரியதாய் இருக்கும். எனவே தான் சொன்னேன் நமக்கு இதை மன்னரிடம் கொண்டு சேர்ப்பதைத் தவிர வேறு வழி இல்லையென்று.”
அவர்களது இயலாமை அவர்களுக்கு எரிச்சலை மூட்டியது.
“மரணம் நம்மை நெருங்குவது போலவே உணர்கிறேன்.” என சலித்துக் கொண்டான் நகுலன்.
“அதை விடு நகுலா. நம்மால் இயலாததைப் பற்றிப் பேசி எவ்விதப் பயனும் இல்லை.”

சிறிது இடைவெளி விட்டு தீரன் தொடர்ந்தான், “நகுலா, நாம் ஆற்றைக் கடந்து அக்கரை சென்று விட்டால் விடிவதற்குள் அரண்மனை சென்று சேர்ந்து விடலாம். மலையைச் சுற்றி சென்றால் நாளை மதியம் தான் அரண்மனை செல்ல முடியும்.”
தீரனுக்கும் நெடு நேரம் பயணம் செல்ல விருப்பம் இல்லாததால் இருவரும் தத்தம் புரவியில் ஏறிக் கொண்டனர். புரவியின் பிடரியை இறுகக் கட்டிக்கொண்டு அமர்ந்து அவைகளை ஆற்றுக்குள் இறக்கினர். ஆற்று நீர் சில்லென்று மேலே பட்டதும் இருவருக்கும் ஒரு நொடி புல்லரித்தது. நீரின் மேல் குதிரைப் பயணம் அவர்களுக்கு சற்று ஆனந்தத்தை அளித்தது. அந்த நேரத்தில் அந்த ஆனந்தம் அவர்களுக்கு அவசியமாகவே இருந்தது. ஆனால் அந்த ஆனந்தம் கூட நெடு நேரம் நிலைக்கவில்லை அவர்களுக்கு. சிறிது சிறிதாக ஆற்று நீரின் வேகம் அதிகரிப்பதை இருவரும் உணர்ந்தார்கள்.
“தீரா, நீரின் வேகம் அதிகமாகிக் கொண்டே போகிறது. குதிரை நீந்துவதற்கு கஷ்டப்படுகிறது. இதற்கு மேல் செல்வது ஆபத்து. கரைக்கு திரும்பி மலையைச் சுற்றியே சென்று விடலாம்.”
“எனக்கும் அதுவே சரியெனப் படுகிறது. வா… திரும்பி விடலாம்.”
ஆனால் திரும்பிச் செல்வதும் அவர்களுக்கு சுலபமாக இல்லை. நீரின் வேகத்தை மீறி திரும்புவது குதிரைகளுக்கு சாத்தியப்படவில்லை. நீரின் போக்கில் செல்லத் துவங்கின குதிரைகள் இரண்டும். தீரனின் குதிரை தன்னை விட்டு விலகிச் சென்று கொண்டிருப்பதைக் கண்ட நகுலன்,
“தீரா, நம்மையும் சுமந்து கொண்டு நீந்துவதற்கு குதிரைகள் திணறுகின்றன. நாம் இறங்கி நீந்திச் சென்று கரையை அடைவோம். குதிரைகள் வந்துசேர்ந்து விடும்.” என அடி வயிற்றிலிருந்து கத்தினான்.

அவனது குரல் தீரனைச் சென்று அடைந்ததா என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. சென்று அடைந்திருந்தாலும் எந்தப் பயனும் இல்லை. திடீரென்று தோன்றிய காட்டாற்று வெள்ளத்தில் தவணை முறையில் கூடிக் கொண்டிருந்த நீரின் வேகம் நொடிப் பொழுதில் உச்சத்தை அடைந்தது. அவர்கள் தானாக குதிரையை விட்டு இறங்கும் முன் காட்டாற்று வெள்ளம் இருவரையும் அடித்து நீருக்குள் தள்ளியது. கண்ணிமைக்கும் நேரத்தில் குதிரைகளை விட்டு வீசி எறியப்பட்ட நகுலனும் தீரனும் ஆற்றின் அடி ஆழம் வரை அமிழ்த்தப்பட்டனர். நீருக்கடியில் போராடிக் கொண்டிருக்கையில் திடீரென ஏதோ நினைவுக்கு வந்தவன் போல் தீரன் தன் இடைக்கச்சில் கை வைக்க மந்திரப் பெட்டியைக் காணவில்லை. உலகத்தின் அழிவிற்கு விதை போட்டுவிட்ட குற்ற உணர்ச்சி அவன் மனதை அரிக்க காட்டாற்று வெள்ளம் அவன் உயிரை அரித்தது. சற்று நேரத்தில் இருவரின் உயிர்களும் நீரில் கரைந்து உடல்கள் சடலங்கலாய் நீர்ப்பரப்பில் மிதந்தன.


மந்திரப் பெட்டி - 2

5 comments:

Chithu said...

just started to read...starts interestingly...will read it fully and then post a detailed comment...

Mohan Kumar P said...

nice one... carry on...

Unknown said...

hey sankar its gud da...1st part than read paninen...i likd d way u portrayd...onnakula evlo talent iruka ennavopo sankar....

Unknown said...

hey sankar its gud da...1st part than read paninen...i likd d way u portrayd...onnakula evlo talent iruka ennavopo sankar....

முகமூடி said...

rite vidu :)