Thursday, August 12, 2010

மந்திரப் பெட்டி - 2

மந்திரப் பெட்டி - 1


சுமார் ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு… அதாவது இன்று… அந்திப் பொழுது!

பரந்து விரிந்த சமுத்திரம்… நீலக்கடலும் நீலவானும் கொஞ்சிக் குலவும் தொடுவானம்… மாலைக் கதிரவன் தொடுவானத்தில் பாதி மறைந்துகொண்டு மீதி எட்டிப் பார்த்து பூமித்தாய்க்கு பிரியா விடை கொடுத்துக் கொண்டு இருந்தான். கதிரவனின் மஞ்சள் கிரணங்கள் வான்பரப்பிலும் கடற்பரப்பிலும் பிரதிபலித்து தொடுவானத்தைத் தங்கப் புதையாலாகவே காட்சியளிக்கச் செய்தது.

தொடுவானம் தொடங்கி வரும் மஞ்சள் கிரணங்களின் பிரதிபலிப்பு குறைந்து கடலின் நீலம் புலப்படும் தருவாயில் ஒரு படகு நின்றுகொண்டிருந்தது. ஆராய்ச்சிப் படகு… கடல்வாழ் தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் உபயோகிக்கும் படகு. அமைதியான கடலின் மெல்லிய அலைகளின் தாளத்திற்கேற்ப ஆடிக்கொண்டு நின்ற படகில் இருவர் நின்று கொண்டிருந்தனர். ஒருவன் பெயர் கார்த்திக். மற்றொருவன் பெயர் சிவா.

இருவரும் யாரையோ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அந்த நடுக்கடலில் யாரை எதிர்பார்க்கின்றனர்?
“டேய் சிவா, இந்த ரெண்டு பேரும் ஏன் இவ்வளவு லேட் பண்றாங்க. இன்னும் பத்து நிமிஷத்துல oxygen cylinder empty ஆயிடும்.”
“Tension ஆகாத கார்த்திக். அவங்களுக்கு என்ன கடலுக்குள்ள போறது புதுசா? ரமேஷ் அஞ்சு வருஷமா நம்ம கூட இருக்கான். கேசவன் நாலரை வருஷமா இருக்கான். வந்துடுவாங்க… கவலப் படாத.”
“Experienced people-ஆ இருந்தும் ஏன் இப்படி கடைசி நிமிஷம் வரை கடலுக்குள்ள இருந்து ரிஸ்க் எடுக்கிறாங்க?”
“Relax Karthik. They should have found something interesting. அதுனால தான் லேட் ஆகுதுன்னு நெனைக்கிறேன்.”

இவர்கள் நால்வரும் ஐந்தாறு வருடங்களாகவே நல்ல நண்பர்கள். அனைவரும் ஒரே ஆராய்ச்சித் துறையில் வேலை செய்வது அவர்கள் நட்பிற்கு பாலமாக அமைந்தது. ரமேஷ் மற்றும் கேசவன் இருவரும் ஆராய்ச்சி சம்பந்தமாக கடலுக்குள் சென்று வெகு நேரம் திரும்பாததால் கார்த்திக்கும் சிவாவும் சிறிது படபடப்புடன் இருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் அவர்கள் படகின் அருகில் சிறிது சலசலப்பு உண்டாக இருவரும் ஆவலுடன் எழுந்து சத்தம் வந்த திசையில் படகு விளிம்பிற்கு சென்று எட்டிப் பார்த்தனர். சில நொடிகளில் wet suit, swim cap, oxygen cylinder சகிதமாக இருவர் கடற்பரப்பைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தனர். இருவரும் தங்கள் பிராணவாயுக் குழாயை வாயிலிருந்து அகற்றி முகத்திரையை விலக்கினார்கள். வந்தவர்கள் யாரென்று பார்த்தால்… என்ன ஆச்சரியம்? எப்படி இது சாத்தியம்? விழிகள் பொய் சொல்லக் கூடுமா? மாண்டு போனதாக எண்ணியவர்கள் மீண்டும் பிழைத்து வருவதென்பது வரலாறு காணாத அதிசயம் ஒன்றுமல்ல… அதற்காக இத்தனை ஆண்டுகள் கழித்தா? ஆயிரம் ஆண்டுகள் என்பது பத்து தலைமுறைகளுக்கு மேல் கண்டிருக்கும் அல்லவா? நம்புவதற்கு கடினமாகத் தான் இருந்தது… ஆனால் நம்பியாக வேண்டிய கட்டாயம். ஆம்… நீருக்குள்ளிருந்து வெளி வந்தவர்கள் சாட்சாத் நகுலனும் தீரனும் தான். அன்று நீருக்குள் மூழ்கிய போது அவர்கள் படை வீரர்கள்… இன்று நீருக்குள்ளிருந்து வெளி வரும்போது ஆராய்ச்சியாளர்கள்! சிவா முகத்திலோ கார்த்திக் முகத்திலோ சிறிதும் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை… இருக்க நியாயமும் இல்லை. இருவரும் இன்முகத்தோடு வரவேற்றனர் ரமேஷையும் கேசவனையும். சரி… இவர்கள் மறு ஜென்மம் எடுத்து வந்துள்ளார்கள் என்றே வைத்து கொண்டாலும் முந்திய ஜென்மத்தில் நண்பர்களாக வாழ்ந்து மடிந்தவர்கள் இந்த ஜென்மத்திலும் நண்பர்களாகவே எப்படி? ஒரு வேலை போன ஜென்மத்தில் இவர்கள் முடிக்காமல் விட்டுச் சென்ற “பணியை” செய்து முடிக்க மீண்டும் வந்துள்ளனரோ!!?

கார்த்திக் அர்ச்சனையைத் தொடங்கினான், “Guys… ஏன் இவ்வளவு லேட் பண்றீங்க. நிமிஷத்துக்கு நிமிஷம் எனக்கு tension build ஆயிட்டே இருந்தது.”
அவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் சிவா, “hey… anything interesting?” என்று கேட்டான்.
“Of course” எனக் கூறிய ரமேஷ் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். மெதுவாக தாங்கள் கண்டுபிடித்துக் கொண்டு வந்ததை எடுத்து நண்பர்களிடம் காட்டினான். ஏதோ புது வகையான தாவரத்தோடு வந்திருப்பார்கள் என ஆர்வ மிகுதியில் இருந்த சிவாவும் கார்த்திக்கும் முதலில் சற்று ஏமாற்றம் அடைந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் விழிகளில் ஆச்சரியம் பொங்கியது. முதலில் அதை ஏதோ சாதாரண மரப்பெட்டியென நினைத்த இருவரும் அதன் பொலிவையும் ஜொலிப்பையும் பார்த்து மிகவும் வியப்படைந்தனர்.
“என்ன மச்சான் இது? இத எங்க கண்டுபிடிச்ச?” சிவாவின் கேள்விக்கு கேசவன் பதிலளித்தான்.
“சிவா, இப்போ இந்த வெளிச்சத்துல இது ஜொலிக்கிறத பார்த்தே இவ்வளவு ஆச்சரியப் படுறியே. Actually இது கடலுக்கு அடியில அவ்வளவு ஆழத்துல பாதி மண்ணுக்குள்ள புதஞ்சு கொஞ்சம் தான் வெளிய நீட்டிட்டு இருந்தது. அப்போவே அது பளிச்சினு கண்ண பரிச்சது தெரியுமா…எங்களால நம்பவே முடியல. அத்தனை அடி ஆழத்துல லைட் ஸோர்ஸ்-ஏ இல்லாம இருக்கும் போது இது மட்டும் எப்படி பளிச்சுன்னு இருக்குனு புரியவே இல்ல.”
“Sounds interesting…!”
ரமேஷ் தொடர்ந்தான், “நீங்க இன்னொண்ணு note பன்னீங்களா… இந்த பெட்டி இப்படி நடுக் கடல்ல அதுவும் நல்லா பாதி மண்ணுக்குள்ள புதஞ்சு settle ஆகி இருக்குன்னா கண்டிப்பா பல வருஷமா இது கடலுக்குள்ள இருக்கணும். அப்படி இருந்தும் கொஞ்சம் கூட damage ஆகாம இன்னும் புத்தம் புதுசா அப்படியே இருக்குன்னா இந்தப் பெட்டிய எத வச்சு செஞ்சிறுப்பாங்க? பாக்குறதுக்கு gold, silver, platinum எது மாதிரியும் இல்ல.. it is quite different.”
“வீட்டுக்கு எடுத்துட்டு போய் இதுல என்ன இருக்குனு பார்க்கலாம். அப்புறம் நம்ம lab-லே குடுத்து இது என்ன metal-னு கேட்டு பார்க்கலாம்”, கார்த்திக் யோசனை சொல்ல கேசவனுக்கு வீடு செல்லும் வரை பொறுமை இல்லை.
“Lab-கு கொண்டு போய் குடுக்கலாம். But இப்போவே இதத் திறந்து உள்ள என்ன இருக்குன்னு பார்க்கலாம்.” என்றான்.
“ரொம்ப வருஷம் கடலுக்குள்ளேயே இருந்திருக்கும் போல தெரியுது. அவ்வளவு easy-ஆ திறக்க முடியாது. இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்ட ஆரம்பிச்சிடும். நாம கிளம்பலாம். “ என்றான் சிவா.
“நோ… நோ… இத்தன வருஷம் கடலுக்குள்ள இருந்தும் கொஞ்சம் கூட கறுத்து எல்லாம் போகாம அப்படியே polish-ஆ இருக்கு. திறக்குறதுக்கு மட்டும் ஏன் கஷ்டப்பட போகுது. சும்மா try பண்ணி பார்ப்போம்.” பெட்டியை கையில் எடுத்தான் ரமேஷ். “இதை எப்படித் திறக்கணும்னு தெரியலையே.” என்று கூறிக் கொண்டே அப்பெட்டியை சுற்றிச் சுற்றிப் பார்த்தான். அதை அப்படியே geometry box திறப்பது போல் திறந்து பார்த்தான். ஆனால் முடியவில்லை.
“உள்ள அப்படி என்ன தான் இருக்கும்?” ஆவலை அடக்க முடியாமல் கேட்டான் சிவா.
“ஒரு வேளை வைரம், வைடூரியம் எல்லாம் பதிச்ச போர் கத்தி ஏதாவது இருக்கும்னு நெனைக்கிறேன்.” கார்த்திக்கின் அனுமானம்.
“டேய்… இவன் K TV-ல மேட்டுக்குடி படம் பாத்துட்டு வந்து பேசுறான் மச்சான்.” கலாய்க்கத் தொடங்கினான் சிவா.
“அதெல்லாம் இருக்கட்டும்… இத திறக்குறதுக்கு ஒரு வழி சொல்லுங்க பா!” அலுத்துக் கொண்டான் ரமேஷ்.
பின்னர் ஏதோ யோசனை வந்தவன் போல கையில் கத்தியை எடுத்து பெட்டியின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் மூடியிருந்த இடத்திலுள்ள இடைவெளியில் விட்டு கெந்திப் பார்த்தான். கத்தி உடைந்தது தான் மிச்சம். பெட்டி திறந்த பாடில்லை. இன்னும் என்னன்னமோ வித்தைகள் எல்லாம் செய்தும் அனைத்தும் பயனற்றுப் போயின.
“சே… கொஞ்சம் கூட luck-ஏ இல்ல மச்சான்.” என்றான் வெறுப்புடன்.

உண்மையில் அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் தான் இருக்கிறதோ!? ஆனால் அதுவும் வெகு நேரம் நீடிக்கவில்லை. பெட்டியின் வலது பக்கத்தில் ஒரு சின்ன துவாரம் இருப்பதைக் கவனித்த ரமேஷிற்கு சட்டென்று ஏதோ ஞானோதயம் உதிக்க, மீண்டும் பெட்டியை நாலாபுறமும் புரட்டினான்.பெட்டியின் பின் பக்கத்திலிருந்து குண்டூசி போன்றதொரு பொருளை மெதுவாக உருவினான். நல்ல அழகிய வேலைப்பாடமைந்த குச்சி அது. அழிவிற்கு கூட அலங்காரம் செய்யும் மனிதர்கள் ஆதி காலம் முதலே இருந்திருக்கின்றனர் போலும். ரமேஷின் முன்னேற்றம் மற்றவர்கள் மனதிலும் பேராவலைக் கிளப்பியது.
“You got it da!” என்றான் கேசவன்.

உள்ளே என்ன இருக்கும் என்ற ஆவல் அனைவரையும் பற்றிக் கொள்ள, “சீக்கிரம் டா” என ரமேஷை அவசரப்படுத்தினர். அந்தக் குச்சியை முதலில் பார்த்த துவாரத்திற்குள் மெதுவாக நுழைக்க அது முழுவதும் உள்ளே சென்று அந்த துவாரத்தில் கச்சிதமாக பொருந்திக்கொண்டது. அனைவரையும் வெற்றிப் புன்னகையோடு ஒரு முறை சுற்றிப் பார்த்த ரமேஷ் மெதுவாக பெட்டியை மேலும் கீழுமாக பிடித்து இழுக்க பெட்டி திறந்தது. பெட்டியின் உள்ளே பார்த்ததும் நால்வர் முகத்திலும் ஏற்பட்ட உணர்ச்சியை விளக்க வார்த்தைகள் இல்லை. அப்படி ஒரு ஏமாற்றம் அனைவர் முகத்திலும். ஆம்… பெட்டியைத் திறந்ததும் அதன் உள்ளிருந்து கொஞ்சம் கடல் தண்ணீர் மட்டும் வெளியில் கொட்டியது. இவ்வளவு பரபரப்பாக முயற்சித்து பெட்டியைத் திறந்து உள்ளே ஒன்றும் இல்லாததைப் பார்த்து வெறுப்பின் எல்லைக்கே சென்றனர். அதைப் பார்த்த எரிச்சலில் ரமேஷ் பெட்டியைத் தூக்கி படகில் இருந்த ஒரு இருக்கையின் மேல் வைத்து விட்டு படகின் விளிம்பிற்கு சென்றான். அவ்வளவு நேரம் அவனது நிழற் பாதுகாப்பில் இருந்த பெட்டியின் மேல் சூரிய கிரணங்கள் முதல் முறையாக நேரடியாகப் பட்டது. அந்நேரம் அங்கு ஏற்பட்ட அதிசய மாற்றங்களை ஒருவரும் உடனடியாகக் கவனிக்கவில்லை. சலித்துப் போய் கன்னத்தில் கை வைத்து அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க கேசவன் விழிகளில் ஆச்சரியம் பெருகியது. “ஹே… அங்க பாருங்க டா” என்று பெட்டியை பார்த்தபடி கூவினான். அப்பொழுது தான் மற்றவர்களும் அதை கவனித்தனர். பெட்டியின் உட்புறம் ஏதேதோ எழுத்துக்கள் தோன்றி சூரிய ஒளி பட்டுபிரகாசித்துக் கொண்டிருந்தன. அனைவர் முகத்திலும் மீண்டும் ஆச்சரியம்.

“இவ்வளவு நேரம் உள்ள ஒண்ணுமே நமக்கு தெரியலையே… இப்போ எப்படி திடீர்னு?” கார்த்திக் குரலில் சற்றே பீதி படர்ந்திருந்தது.
“அதெல்லாம் முதல்லயே இருந்திருக்கும். நாம கவனிச்சிருக்க மாட்டோம்.” என்றான் சிவா.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சிகளுக்கு நடுவே பிறந்து வளர்ந்த அவர்களுக்கு மாய மந்திரம் மேல் எல்லாம் நம்பிக்கை இருக்க நியாயமில்லாததால் சிவாவின் வார்த்தைகளை அப்படியே ஆமோதித்தனர்.
“சரி… அதுல என்ன எழுதி இருக்குன்னு புரியுதா?” கேசவன் கேள்விக்கு பதிலளித்த ரமேஷ்,
“எழுத்து எல்லாம் தமிழ் எழுத்து தான். ஆனா வார்த்தைகள் எல்லாம் ஒண்ணும் புரியற மாதிரியே இல்லையே!” என்றான்.
“குத்துமதிப்பா பார்த்தா சமஸ்கிருத வார்த்தைகள் மாதிரி இருக்கு. என்ன இருக்குனு அப்படியே படி. கார்த்திக்குக்கு தான் ஹிந்தி தெரியுமே… அவனால ஏதாவது புரிஞ்சிக்க முடியுதானு பார்ப்போம்.” என்றான் சிவா.
ரமேஷ் வாசிக்கத் தொடங்கினான்…

(முதல் முறை)
“நமஸ்கரோட்டி அந்தகா நமஸ்கரோட்டி அனலா
ஜ்வாலனா நிஸூதாயிடும் ஜீவலோக”


திக்கித் திணறி வாசித்து முடித்து விட்டு ஏதாவது புரிகிறதா என்பது போல் கார்த்திக்கைப் பார்த்தான். சிந்திப்பது போல் நெற்றியை சுருக்கி கொண்டு, “இன்னொரு தடவ வாசி” என்றான் ரமேஷிடம்.

(இரண்டாம் முறை)
“நமஸ்கரோட்டி அந்தகா நமஸ்கரோட்டி அனலா
ஜ்வாலனா நிஸூதாயிடும் ஜீவலோக”


“இப்போவாச்சும் புரிஞ்சுதா?” நக்கலாகக் கேட்டான் ரமேஷ்.
“ஏதோ சாமி கும்பிடற மாதிரி வார்த்தைகள் வருது. ரொம்ப clear-ஆ ஒண்ணும் புரியல.” என்றான் கார்த்திக்.
“டேய்.... சும்மா scene போடாத. Sankskrit தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லு.” கலாய்க்கத் தொடங்கினான் கேசவன்.
“ரொம்ப எல்லாம் தெரியாது டா… சின்ன வயசுல கொஞ்சம் படிச்சது.” சமாளித்தான் கார்த்திக்.
ரமேஷ் தொடர்ந்தான், “இதோ பார்… இன்னும் ஒரே ஒரு தடவ வாசிச்சுக் காட்டுறேன். மரியாதையா அர்த்தம் சொல்லு…”.

அவன் அப்படிச் சொன்னதும் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த இடத்தில் திடீரென்று பலமாகக் காற்று வீசியது. சில நிமிடங்களுக்கு கடல் அலைகளும் பெரிதாக எழுந்தன. சற்றும் எதிர்பார்க்காமல் நடந்த இந்த குழப்பத்தில் மந்திரப் பெட்டி ரமேஷின் கையிலிருந்து தவறி விழுந்தது. ஒரு நொடி அவர்களுக்கு பயம் ஏற்பட்டாலும் சமாளித்துக் கொண்டு என்னவென்று ஆராய முற்பட்டனர். ஆனால் ஓரிரு நிமிடங்களில் காற்றும் கடலும் அடங்கி பழையபடி அமைதி திரும்பியது.

“என்ன ஆச்சு திடீர்னு?” என்று சிவா கேட்க,
“அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம். முதல்ல நம்ம கார்த்திக்கு உண்மையிலேயே sankskrit தெரியுமானு பார்க்கலாம்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் கேசவன்.

நண்பனைக் கேலி பேசும் வேகத்தில் இருந்த அவர்களுக்கு இயற்கை கொடுத்த எச்சரிக்கை விளங்கவில்லை. நடந்த குழப்பத்தில் படகின் ஒரு மூலையில் போய் விழுந்து கிடந்த மந்திரப் பெட்டியை மீண்டும் எடுத்து வந்தான் ரமேஷ்.
“மச்சான்… சொன்னது நெனவிருக்கு இல்ல... this is your last chance!” என்று கார்த்திக்கிடம் சொல்லி விட்டு மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினான்.

(மூன்றாம் முறை)
“நமஸ்கரோட்டி அந்தகா நமஸ்கரோட்டி அனலா
ஜ்வாலனா நிஸூதாயிடும் ஜீவலோக”


அவன் மந்திரத்தை உச்சரித்து முடிக்கவும் அந்த அதிசயம் நடந்தேறியது. ஒரு கணம் திகைத்துப் போனான் ரமேஷ்.
“டேய்.. இங்க பாருங்கடா.”
“என்னடா மறஞ்சிருச்சு!”
“எப்படி இப்படி திடீர்னு காணாம போகும்?” “How is it possible?” “எனக்கு இங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல…”
“பயமா இருக்கு மச்சான்”

அவர்களுக்குள் கூச்சல்களும் குழப்பங்களும் மேலோங்கிக் கொண்டே போக ரமேஷ் நண்பர்களை ஆசுவாசப்படுத்தும் முயற்சியில் இறங்கினான்... பெட்டியை மீண்டும் அதே இருக்கையில் வைத்தபடி! ஆம்… மறைந்தது மந்திரப் பெட்டியல்ல… அதில் பொறிக்கப்பட்டிருந்த மந்திரச் சொற்கள் மட்டுமே! ரமேஷ் மூன்றாவது முறை மந்திரத்தைப் படித்து முடித்ததும் பெட்டியில் ஏதோ விநோத மாற்றங்கள் நிகழ்வதை உணர்ந்தான். அடுத்த சில நொடிகளில் மந்திரச் சொற்கள் இருந்த இடம் காலியாக இருப்பதைப் பார்த்துத் திகைத்தான். அதைக் கண்டு மற்ற நண்பர்களையும் பீதி ஆட்கொள்ள தன்னையும் நிதானித்துக்கொண்டு அவர்களையும் சமாதானப்படுத்தினான் ரமேஷ்.

“Friends… இப்போ ஏன் நாம இவ்வளவு பயப்படறோம்.”
“பின்ன என்னடா பண்ணச் சொல்ற? முதல்ல பெட்டிய திறந்தப்ப உள்ள ஒண்ணுமே இல்ல. திடீர்னு ஏதோ எழுத்து எல்லாம் வந்துச்சு. கொஞ்ச நேரத்துல அதுவே காணாம போயிடுச்சு. பயப்படாம என்ன பண்ண முடியும். இந்த பெட்டிக்குள்ள பேய் பிசாசு ஏதாவது இருக்குமோ? பேசாம தூக்கி இத கடலுக்குள்ளேயே போட்டுட்டு போயிடலாம் டா.” பயத்தில் உளறிக் கொட்டினான் கார்த்திக்.
ரமேஷ் தொடர்ந்தான், “கார்த்திக், idiot மாதிரி பேசாத. இதுல பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்ல. இது ஒண்ணும் இந்த உலகத்துல நடக்க முடியாத விஷயம் இல்லியே. நாம invisible ink பத்தி படிச்சது இல்ல. அது மாதிரி கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ராஜா காலத்துல use பண்ண technique-ஆ இருக்கும் இது.”

நண்பர்களை ஏறிட்டு பார்த்தான் ரமேஷ். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. அவர்கள் யாரும் சமாதானமடையவில்லை என்பதை அவர்கள் முகம் தெளிவாகச் சொல்லியது.
“Come on guys. It is a kind of Steganography.” முயற்சியைத் தொடர்ந்தான் ரமேஷ்.
“இதக் கொண்டு போய் நம்ம lab-ல குடுத்தா ரெண்டு மூணு வாரத்துல இத பத்தின மொத்த details-உம் அக்கு வேற ஆணி வேற புட்டு புட்டு வைக்கப் போறாங்க. இப்போ நாம எதுக்கு தேவை இல்லாம கவலப் பட்டுட்டு இருக்கோம். Come on. Lets go!” படகைக் கரையை நோக்கி திருப்பும் முயற்சியில் இறங்கினான் ரமேஷ்.

மற்ற நண்பர்களுக்கும் ரமேஷ் பேச்சில் ஏதோ உண்மை இருப்பதாகவே தோன்ற சற்று சமாதானம் அடைந்தனர். படகு கரையை நோக்கி முன்னேறத் தொடங்கியது. கதிரவன் தன் கடைசிப் பார்வையை வீசிவிட்டு முழுவதுமாய் கடலுக்குள் மூழ்கினான்.


மந்திரப் பெட்டி - 3

No comments: