Tuesday, February 15, 2011

நிலா

வானக் கடலினிலே
மேகப் படகினிலே
சந்திர வதனத்தாளின்
மந்திரப் பயணம்!

அன்னப் பறவையவள்
மின்னல் துடுப்பிடுகையில்
தெறிக்கும் அலையது
மண்விழும் மழை!

வெள்ளத்தில் மிதந்துவரும்
வெள்ளிப் பதுமையினை
அள்ளி அணைத்திடவே
முகில்களின் முற்றுகை!

தெள்ளிய சமுத்திரத்தில்
அள்ளிய முத்தினைப்போல்
விழிகளில் பூப்பறிக்கும்
நிலவொளியின் பூரிப்பு!

குறைந்து பிறையாகி
மறைந்து உருவாகி
மலர்ந்து முழுமதியாகி
சுழலும் பருவமாற்றமழகே!

காவியங்கள் போற்றிப்
பாடிடும் தங்கத்தாரகை!
ஓவியம் போலவளைத்
தீட்டியதெந்தத் தூரிகை?

நாடிவரும் சூரியதேவன்
காணும்போது நாணமென்ன?
கதிரவனோடு சந்திரனுக்கு
கண்ணாமூச்சி ஆட்டமென்ன?

சந்திரனின் சுந்தரவலையில்
எண்ணற்ற விண்மீன்கள்!
கடலில் விரித்த வலையல்ல...
கடலே விரிந்தது வலையாக!

கொள்ளை அழகைக்
கொண்ட நிலவே...
நீ
நீலவானில் நீராடி
முகிற்புகையில் குளிர்காய்ந்து
மின்னல் கொண்டு
கூந்தல் முடிந்து
நட்சத்திரப் பொட்டுமிட்டு
கரையொதுங்கி தரையிறங்கி
வாராயோ?
பூமித்தாய் துயில்கொள்ள
மடிமீது இடமொன்று
தாராயோ?

No comments: