Friday, January 24, 2014

இன்று ஒரு செருப்படி

ரயிலில் நண்பனுடன் வரும்போது எதிரில் ஒரு மொக்கை பையன் ஒரு சுமாரான பெண்ணுடன் (இருவரும் ஆங்கிலம் பேசும் அயல் நாட்டவர்) கடலை வறுப்பதை பார்த்ததும் கடமையே கருத்தாக கிண்டல் பேச எத்தனித்தோம். ஆங்கிலம் கலந்து பேசி அது அந்த மொக்கைக்கு புரிந்து விட்டால் நாம் மொக்கை வாங்குவதோடு நில்லாமல் பொக்கை வாயோடு போக வேண்டியிருக்கும் என்பதால் தூய தமிழில் கலாய்க்க முயற்சி செய்தோம். அப்போது தான் புரிந்தது - நாம் பேசத் தொடங்கினால் தமிழினி மெல்லச் சாகும்; அதற்கு ஆங்கிலம் அழுது ஒப்பாரி வைக்குமென்று!
உடனே எனக்குள் ஒரு குரல் கேள்வி கேட்க தொடங்கியது...
(ஆஹா... வந்துட்டான்யா வந்துட்டான்யா...!)
மனசாட்சி: தம்பி... உன்கிட்ட நான் ரெண்டு கேள்வி கேக்கணும்.
நான்: மறுபடியுமா!!?
மனசாட்சி: நீ அயல் நாட்டவனா? இல்ல அவங்க அயல் நாட்டவர்களா?
நான்: அது... வந்து...
மனசாட்சி: பொழப்பு தேடி வந்த இடத்துல உனக்கு ஏன்டா இவ்ளோ பேச்சு?
நான்: நாம ரெண்டாவது கேள்விக்கு போகலாமே.
மனசாட்சி: சரி... ஒழிஞ்சு போ! என்னமோ கிண்டல் பேசுறியே... உன்னால ஒழுங்கா தமிழ் பேச முடியுதா முதல்ல?
நான்: (ஆண்டவா... இவன் கிட்ட இருந்து என்ன காப்பாத்து!)
மனசாட்சி: அவங்க ரெண்டு பேராலயும் தமிழ் கலக்காம ஆங்கிலம் பேச முடியும். உன்னால ஆங்கிலம் கலக்காம தமிழ் பேச முடியுமா?
நான்: (இதுக்கு உன் முதல் கேள்வியே தேவல) ஹேய்... இங்கிலிஷ் இஸ் தி லிங்க் லாங்குவேஜ் யூ நோ!
மனசாட்சி: அடச்சீ... தமிழ்ல பேசு!
நான்: நான் என்ன சொல்ல வந்தேன்னா... ஆங்கிலம் தான் இந்த உலகத்தோட லிங்க்... ங்ங்ங்...
(ஆஹா... லிங்க் லாங்குவேஜ்-கு தமிழ்ல என்னனு தெரியலியே...)
நான்: ஸாரிப்பா... ஐ ஆம் டோட்டல் சரண்டர்.
மனசாட்சி: இங்கிலிஷ்-ஆவது ஒழுங்கா பேசுதா பாரு மூதேவி!
(சப்... சப்... சப்...)

பின்குறிப்பு: Link Language - தொடர்பு மொழி

Tuesday, January 14, 2014

போகிற போக்கில் ஒரு தத்துவம்

காலையில் ஒரு செய்தியை கேட்டதும் மனதுக்குள் ஒரு பாடல் பாடினேன் (சரி... படித்தேன்!)
நான்: ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா...
(என் மனசாட்சிக்கு பொறுக்கவில்லை...)
மனசாட்சி: தம்பி... நீ ரெண்டு விஷயத்த மறந்துட்ட!
நான்: அப்படி என்ன மறந்தேன்?
மனசாட்சி: நீ மொத்தமே அஞ்சு அடி தான்... ஆறடினு சொல்லி பெருமை பீத்திக்காத.
நான்: ரைட் விடு... அடுத்து?
மனசாட்சி: உங்களயெல்லாம் இப்போ யாருடா பொதைக்கிறா... நிலம் சொந்தமாறதுக்கு? செத்ததும் ஒரு டப்பாகுள்ள போட்டு ஒரு மெஷின்குள்ள விட்டா பொடியாகி வெளிய வர போறீங்க. உங்களுக்கெல்லாம் நிலம் இல்லடா... நிலத்துல இருக்கிற தூசு கூட சொந்தம் கிடையாது.
(தெறித்ததை துடைத்து விட்டு ஒன்றும் நடக்காதது போல் பேசத் தொடங்கினேன்)
நான்: ஆமா ஆமா... நீ சொல்றது ரொம்ப சரி... அந்த சாம்பலக் கூட சொந்தக்காரங்க ஆத்துல கரைக்கிறாங்களோ, இல்ல சாக்கடைல கரைக்கிறாங்களோ... யாருக்கு தெரியும்!?
மனசாட்சி: உங்க ஊருல தான் ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாதே!!
(அடச்சே... வாய தொறக்க விட மாட்றானே!!)