Wednesday, February 16, 2011

தேடல்

காடுகளில் தேடியாச்சு
வீடுகளில் தேடியாச்சு
ஆலயங்களில் தேடியாச்சு
மடங்களில் தேடியாச்சு
தூண்களிலும் தேடியாச்சு
துரும்புகளிலும் தேடியாச்சு

தெருத்தெருவா தேடி அலஞ்சும்
கிடைக்கலையே எந்தச் சாமியும்
தலத்தலையா அடிச்சு சொல்லியும்
திருந்தலையே எந்த ஆசாமியும்

பிள்ளைக்கு குடுக்க
பால் இல்லேனாலும்
சாமி சிலைக்கு
பாலூத்த மறந்ததில்ல!

அடுத்தவேளை சோத்துக்கு
வழி இல்லேனாலும்
நேத்திக் கடனுக்கு
ரத்தஞ்சிந்த நொந்ததில்ல!

அன்னாடம் வீட்டுல
அடுப்பெறிக்க வக்கில்லேனாலும்
எவன்சாமி பெருசுன்னு
சண்டபோட சலைச்சதில்ல!

உரிமைக்கும் உடைமைக்கும்
குரல்கொடுக்க துப்பில்லேனாலும்
தன்சாமி மானங்காக்க
தலையறுக்க தயக்கமில்ல!

இருக்கிற பிரச்சனைகளே
தலைக்குமேல ஓங்கிநிக்க
இல்லாத பிரச்சனைக்கு
விலைகொடுக்க யோசிக்கவில்ல!

வெட்டுப்பட்டும் குத்துப்பட்டும்
ஆஞ்சு அடங்கி
ஒஞ்சு போயும்
எவனுக்கும் புத்தி வரல

இத்தன கொடுமையும்
வாடிக்கையா மனுசன் செய்ய – இத
வேடிக்கை பார்க்கக்கூட
அந்த சாமி வரல!

Tuesday, February 15, 2011

நிலா

வானக் கடலினிலே
மேகப் படகினிலே
சந்திர வதனத்தாளின்
மந்திரப் பயணம்!

அன்னப் பறவையவள்
மின்னல் துடுப்பிடுகையில்
தெறிக்கும் அலையது
மண்விழும் மழை!

வெள்ளத்தில் மிதந்துவரும்
வெள்ளிப் பதுமையினை
அள்ளி அணைத்திடவே
முகில்களின் முற்றுகை!

தெள்ளிய சமுத்திரத்தில்
அள்ளிய முத்தினைப்போல்
விழிகளில் பூப்பறிக்கும்
நிலவொளியின் பூரிப்பு!

குறைந்து பிறையாகி
மறைந்து உருவாகி
மலர்ந்து முழுமதியாகி
சுழலும் பருவமாற்றமழகே!

காவியங்கள் போற்றிப்
பாடிடும் தங்கத்தாரகை!
ஓவியம் போலவளைத்
தீட்டியதெந்தத் தூரிகை?

நாடிவரும் சூரியதேவன்
காணும்போது நாணமென்ன?
கதிரவனோடு சந்திரனுக்கு
கண்ணாமூச்சி ஆட்டமென்ன?

சந்திரனின் சுந்தரவலையில்
எண்ணற்ற விண்மீன்கள்!
கடலில் விரித்த வலையல்ல...
கடலே விரிந்தது வலையாக!

கொள்ளை அழகைக்
கொண்ட நிலவே...
நீ
நீலவானில் நீராடி
முகிற்புகையில் குளிர்காய்ந்து
மின்னல் கொண்டு
கூந்தல் முடிந்து
நட்சத்திரப் பொட்டுமிட்டு
கரையொதுங்கி தரையிறங்கி
வாராயோ?
பூமித்தாய் துயில்கொள்ள
மடிமீது இடமொன்று
தாராயோ?