Saturday, August 14, 2010

மந்திரப் பெட்டி - 3

மந்திரப் பெட்டி - 2


அதே ஆயிரம் வருடங்களுக்கு முன்… அதே நாள்… அதே அந்திப் பொழுது!

அதே அடர்ந்த வனம்… அதே அழகியக் குடில்!

நகுலனும் தீரனும் மந்திரப் பெட்டியை கொடுமுடியானிடம் பெற்றுக் கொண்டு விடை பெற்றுச் சென்று அரை நாழிகையில் கொடுமுடியானின் சீடன் தயங்கிக் கொண்டே பேசத் தொடங்கினான்.
“குருவே! அடியேனுக்கு ஒரு சந்தேகம்.”
“ம்… கேள் சிஷயா. உன் மனதை உறுத்தும் ஐயம் என்னவோ?”
“ஒரு வேளை நம் மன்னர் மந்திரப் பெட்டியை உபயோகப் படுத்தாமல் தங்களிடம் திருப்பி அனுப்பி விட்டால் அதை எவ்வாறு செயலிழக்கச் செய்வது?”
“சீடனே, இவ்வுலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கும் மாற்று மந்திரம் உண்டு. எனது மந்திரப் பெட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல. காளி அன்னைக்கு பூஜை செய்து மாற்று மந்திரத்தை ஜபித்தால் மந்திரப் பெட்டி தன் சக்தியை இழந்துவிடும்”

சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பேசத் தொடங்கினான் கொடுமுடியான்.
“ஆனால் இந்த மந்திரப் பெட்டியை பொருத்தவரை அதை செயலிழக்கச் செய்ய மாற்று மந்திரத்தை விட சுலபமான வழி ஒன்று உள்ளது.”
அது என்ன என்பது போல் சீடன் ஆவலுடன் நோக்க கொடுமுடியான் தொடர்ந்தான்.
“நான் அந்தப் பெட்டிக்குள் செதுக்கி இருக்கும் மந்திரம் நெருப்புடன் தொடர்புடையது. அந்த மந்திரப் பெட்டியின் உட்புறம் ஒரு துளி நீர் பட்டாலும் அடுத்த நொடி மந்திரம் பயனற்றுப் போய் விடும்!”

--- முற்றும்

Thursday, August 12, 2010

மந்திரப் பெட்டி - 2

மந்திரப் பெட்டி - 1


சுமார் ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு… அதாவது இன்று… அந்திப் பொழுது!

பரந்து விரிந்த சமுத்திரம்… நீலக்கடலும் நீலவானும் கொஞ்சிக் குலவும் தொடுவானம்… மாலைக் கதிரவன் தொடுவானத்தில் பாதி மறைந்துகொண்டு மீதி எட்டிப் பார்த்து பூமித்தாய்க்கு பிரியா விடை கொடுத்துக் கொண்டு இருந்தான். கதிரவனின் மஞ்சள் கிரணங்கள் வான்பரப்பிலும் கடற்பரப்பிலும் பிரதிபலித்து தொடுவானத்தைத் தங்கப் புதையாலாகவே காட்சியளிக்கச் செய்தது.

தொடுவானம் தொடங்கி வரும் மஞ்சள் கிரணங்களின் பிரதிபலிப்பு குறைந்து கடலின் நீலம் புலப்படும் தருவாயில் ஒரு படகு நின்றுகொண்டிருந்தது. ஆராய்ச்சிப் படகு… கடல்வாழ் தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் உபயோகிக்கும் படகு. அமைதியான கடலின் மெல்லிய அலைகளின் தாளத்திற்கேற்ப ஆடிக்கொண்டு நின்ற படகில் இருவர் நின்று கொண்டிருந்தனர். ஒருவன் பெயர் கார்த்திக். மற்றொருவன் பெயர் சிவா.

இருவரும் யாரையோ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அந்த நடுக்கடலில் யாரை எதிர்பார்க்கின்றனர்?
“டேய் சிவா, இந்த ரெண்டு பேரும் ஏன் இவ்வளவு லேட் பண்றாங்க. இன்னும் பத்து நிமிஷத்துல oxygen cylinder empty ஆயிடும்.”
“Tension ஆகாத கார்த்திக். அவங்களுக்கு என்ன கடலுக்குள்ள போறது புதுசா? ரமேஷ் அஞ்சு வருஷமா நம்ம கூட இருக்கான். கேசவன் நாலரை வருஷமா இருக்கான். வந்துடுவாங்க… கவலப் படாத.”
“Experienced people-ஆ இருந்தும் ஏன் இப்படி கடைசி நிமிஷம் வரை கடலுக்குள்ள இருந்து ரிஸ்க் எடுக்கிறாங்க?”
“Relax Karthik. They should have found something interesting. அதுனால தான் லேட் ஆகுதுன்னு நெனைக்கிறேன்.”

இவர்கள் நால்வரும் ஐந்தாறு வருடங்களாகவே நல்ல நண்பர்கள். அனைவரும் ஒரே ஆராய்ச்சித் துறையில் வேலை செய்வது அவர்கள் நட்பிற்கு பாலமாக அமைந்தது. ரமேஷ் மற்றும் கேசவன் இருவரும் ஆராய்ச்சி சம்பந்தமாக கடலுக்குள் சென்று வெகு நேரம் திரும்பாததால் கார்த்திக்கும் சிவாவும் சிறிது படபடப்புடன் இருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் அவர்கள் படகின் அருகில் சிறிது சலசலப்பு உண்டாக இருவரும் ஆவலுடன் எழுந்து சத்தம் வந்த திசையில் படகு விளிம்பிற்கு சென்று எட்டிப் பார்த்தனர். சில நொடிகளில் wet suit, swim cap, oxygen cylinder சகிதமாக இருவர் கடற்பரப்பைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தனர். இருவரும் தங்கள் பிராணவாயுக் குழாயை வாயிலிருந்து அகற்றி முகத்திரையை விலக்கினார்கள். வந்தவர்கள் யாரென்று பார்த்தால்… என்ன ஆச்சரியம்? எப்படி இது சாத்தியம்? விழிகள் பொய் சொல்லக் கூடுமா? மாண்டு போனதாக எண்ணியவர்கள் மீண்டும் பிழைத்து வருவதென்பது வரலாறு காணாத அதிசயம் ஒன்றுமல்ல… அதற்காக இத்தனை ஆண்டுகள் கழித்தா? ஆயிரம் ஆண்டுகள் என்பது பத்து தலைமுறைகளுக்கு மேல் கண்டிருக்கும் அல்லவா? நம்புவதற்கு கடினமாகத் தான் இருந்தது… ஆனால் நம்பியாக வேண்டிய கட்டாயம். ஆம்… நீருக்குள்ளிருந்து வெளி வந்தவர்கள் சாட்சாத் நகுலனும் தீரனும் தான். அன்று நீருக்குள் மூழ்கிய போது அவர்கள் படை வீரர்கள்… இன்று நீருக்குள்ளிருந்து வெளி வரும்போது ஆராய்ச்சியாளர்கள்! சிவா முகத்திலோ கார்த்திக் முகத்திலோ சிறிதும் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை… இருக்க நியாயமும் இல்லை. இருவரும் இன்முகத்தோடு வரவேற்றனர் ரமேஷையும் கேசவனையும். சரி… இவர்கள் மறு ஜென்மம் எடுத்து வந்துள்ளார்கள் என்றே வைத்து கொண்டாலும் முந்திய ஜென்மத்தில் நண்பர்களாக வாழ்ந்து மடிந்தவர்கள் இந்த ஜென்மத்திலும் நண்பர்களாகவே எப்படி? ஒரு வேலை போன ஜென்மத்தில் இவர்கள் முடிக்காமல் விட்டுச் சென்ற “பணியை” செய்து முடிக்க மீண்டும் வந்துள்ளனரோ!!?

கார்த்திக் அர்ச்சனையைத் தொடங்கினான், “Guys… ஏன் இவ்வளவு லேட் பண்றீங்க. நிமிஷத்துக்கு நிமிஷம் எனக்கு tension build ஆயிட்டே இருந்தது.”
அவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் சிவா, “hey… anything interesting?” என்று கேட்டான்.
“Of course” எனக் கூறிய ரமேஷ் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். மெதுவாக தாங்கள் கண்டுபிடித்துக் கொண்டு வந்ததை எடுத்து நண்பர்களிடம் காட்டினான். ஏதோ புது வகையான தாவரத்தோடு வந்திருப்பார்கள் என ஆர்வ மிகுதியில் இருந்த சிவாவும் கார்த்திக்கும் முதலில் சற்று ஏமாற்றம் அடைந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் விழிகளில் ஆச்சரியம் பொங்கியது. முதலில் அதை ஏதோ சாதாரண மரப்பெட்டியென நினைத்த இருவரும் அதன் பொலிவையும் ஜொலிப்பையும் பார்த்து மிகவும் வியப்படைந்தனர்.
“என்ன மச்சான் இது? இத எங்க கண்டுபிடிச்ச?” சிவாவின் கேள்விக்கு கேசவன் பதிலளித்தான்.
“சிவா, இப்போ இந்த வெளிச்சத்துல இது ஜொலிக்கிறத பார்த்தே இவ்வளவு ஆச்சரியப் படுறியே. Actually இது கடலுக்கு அடியில அவ்வளவு ஆழத்துல பாதி மண்ணுக்குள்ள புதஞ்சு கொஞ்சம் தான் வெளிய நீட்டிட்டு இருந்தது. அப்போவே அது பளிச்சினு கண்ண பரிச்சது தெரியுமா…எங்களால நம்பவே முடியல. அத்தனை அடி ஆழத்துல லைட் ஸோர்ஸ்-ஏ இல்லாம இருக்கும் போது இது மட்டும் எப்படி பளிச்சுன்னு இருக்குனு புரியவே இல்ல.”
“Sounds interesting…!”
ரமேஷ் தொடர்ந்தான், “நீங்க இன்னொண்ணு note பன்னீங்களா… இந்த பெட்டி இப்படி நடுக் கடல்ல அதுவும் நல்லா பாதி மண்ணுக்குள்ள புதஞ்சு settle ஆகி இருக்குன்னா கண்டிப்பா பல வருஷமா இது கடலுக்குள்ள இருக்கணும். அப்படி இருந்தும் கொஞ்சம் கூட damage ஆகாம இன்னும் புத்தம் புதுசா அப்படியே இருக்குன்னா இந்தப் பெட்டிய எத வச்சு செஞ்சிறுப்பாங்க? பாக்குறதுக்கு gold, silver, platinum எது மாதிரியும் இல்ல.. it is quite different.”
“வீட்டுக்கு எடுத்துட்டு போய் இதுல என்ன இருக்குனு பார்க்கலாம். அப்புறம் நம்ம lab-லே குடுத்து இது என்ன metal-னு கேட்டு பார்க்கலாம்”, கார்த்திக் யோசனை சொல்ல கேசவனுக்கு வீடு செல்லும் வரை பொறுமை இல்லை.
“Lab-கு கொண்டு போய் குடுக்கலாம். But இப்போவே இதத் திறந்து உள்ள என்ன இருக்குன்னு பார்க்கலாம்.” என்றான்.
“ரொம்ப வருஷம் கடலுக்குள்ளேயே இருந்திருக்கும் போல தெரியுது. அவ்வளவு easy-ஆ திறக்க முடியாது. இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்ட ஆரம்பிச்சிடும். நாம கிளம்பலாம். “ என்றான் சிவா.
“நோ… நோ… இத்தன வருஷம் கடலுக்குள்ள இருந்தும் கொஞ்சம் கூட கறுத்து எல்லாம் போகாம அப்படியே polish-ஆ இருக்கு. திறக்குறதுக்கு மட்டும் ஏன் கஷ்டப்பட போகுது. சும்மா try பண்ணி பார்ப்போம்.” பெட்டியை கையில் எடுத்தான் ரமேஷ். “இதை எப்படித் திறக்கணும்னு தெரியலையே.” என்று கூறிக் கொண்டே அப்பெட்டியை சுற்றிச் சுற்றிப் பார்த்தான். அதை அப்படியே geometry box திறப்பது போல் திறந்து பார்த்தான். ஆனால் முடியவில்லை.
“உள்ள அப்படி என்ன தான் இருக்கும்?” ஆவலை அடக்க முடியாமல் கேட்டான் சிவா.
“ஒரு வேளை வைரம், வைடூரியம் எல்லாம் பதிச்ச போர் கத்தி ஏதாவது இருக்கும்னு நெனைக்கிறேன்.” கார்த்திக்கின் அனுமானம்.
“டேய்… இவன் K TV-ல மேட்டுக்குடி படம் பாத்துட்டு வந்து பேசுறான் மச்சான்.” கலாய்க்கத் தொடங்கினான் சிவா.
“அதெல்லாம் இருக்கட்டும்… இத திறக்குறதுக்கு ஒரு வழி சொல்லுங்க பா!” அலுத்துக் கொண்டான் ரமேஷ்.
பின்னர் ஏதோ யோசனை வந்தவன் போல கையில் கத்தியை எடுத்து பெட்டியின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் மூடியிருந்த இடத்திலுள்ள இடைவெளியில் விட்டு கெந்திப் பார்த்தான். கத்தி உடைந்தது தான் மிச்சம். பெட்டி திறந்த பாடில்லை. இன்னும் என்னன்னமோ வித்தைகள் எல்லாம் செய்தும் அனைத்தும் பயனற்றுப் போயின.
“சே… கொஞ்சம் கூட luck-ஏ இல்ல மச்சான்.” என்றான் வெறுப்புடன்.

உண்மையில் அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் தான் இருக்கிறதோ!? ஆனால் அதுவும் வெகு நேரம் நீடிக்கவில்லை. பெட்டியின் வலது பக்கத்தில் ஒரு சின்ன துவாரம் இருப்பதைக் கவனித்த ரமேஷிற்கு சட்டென்று ஏதோ ஞானோதயம் உதிக்க, மீண்டும் பெட்டியை நாலாபுறமும் புரட்டினான்.பெட்டியின் பின் பக்கத்திலிருந்து குண்டூசி போன்றதொரு பொருளை மெதுவாக உருவினான். நல்ல அழகிய வேலைப்பாடமைந்த குச்சி அது. அழிவிற்கு கூட அலங்காரம் செய்யும் மனிதர்கள் ஆதி காலம் முதலே இருந்திருக்கின்றனர் போலும். ரமேஷின் முன்னேற்றம் மற்றவர்கள் மனதிலும் பேராவலைக் கிளப்பியது.
“You got it da!” என்றான் கேசவன்.

உள்ளே என்ன இருக்கும் என்ற ஆவல் அனைவரையும் பற்றிக் கொள்ள, “சீக்கிரம் டா” என ரமேஷை அவசரப்படுத்தினர். அந்தக் குச்சியை முதலில் பார்த்த துவாரத்திற்குள் மெதுவாக நுழைக்க அது முழுவதும் உள்ளே சென்று அந்த துவாரத்தில் கச்சிதமாக பொருந்திக்கொண்டது. அனைவரையும் வெற்றிப் புன்னகையோடு ஒரு முறை சுற்றிப் பார்த்த ரமேஷ் மெதுவாக பெட்டியை மேலும் கீழுமாக பிடித்து இழுக்க பெட்டி திறந்தது. பெட்டியின் உள்ளே பார்த்ததும் நால்வர் முகத்திலும் ஏற்பட்ட உணர்ச்சியை விளக்க வார்த்தைகள் இல்லை. அப்படி ஒரு ஏமாற்றம் அனைவர் முகத்திலும். ஆம்… பெட்டியைத் திறந்ததும் அதன் உள்ளிருந்து கொஞ்சம் கடல் தண்ணீர் மட்டும் வெளியில் கொட்டியது. இவ்வளவு பரபரப்பாக முயற்சித்து பெட்டியைத் திறந்து உள்ளே ஒன்றும் இல்லாததைப் பார்த்து வெறுப்பின் எல்லைக்கே சென்றனர். அதைப் பார்த்த எரிச்சலில் ரமேஷ் பெட்டியைத் தூக்கி படகில் இருந்த ஒரு இருக்கையின் மேல் வைத்து விட்டு படகின் விளிம்பிற்கு சென்றான். அவ்வளவு நேரம் அவனது நிழற் பாதுகாப்பில் இருந்த பெட்டியின் மேல் சூரிய கிரணங்கள் முதல் முறையாக நேரடியாகப் பட்டது. அந்நேரம் அங்கு ஏற்பட்ட அதிசய மாற்றங்களை ஒருவரும் உடனடியாகக் கவனிக்கவில்லை. சலித்துப் போய் கன்னத்தில் கை வைத்து அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க கேசவன் விழிகளில் ஆச்சரியம் பெருகியது. “ஹே… அங்க பாருங்க டா” என்று பெட்டியை பார்த்தபடி கூவினான். அப்பொழுது தான் மற்றவர்களும் அதை கவனித்தனர். பெட்டியின் உட்புறம் ஏதேதோ எழுத்துக்கள் தோன்றி சூரிய ஒளி பட்டுபிரகாசித்துக் கொண்டிருந்தன. அனைவர் முகத்திலும் மீண்டும் ஆச்சரியம்.

“இவ்வளவு நேரம் உள்ள ஒண்ணுமே நமக்கு தெரியலையே… இப்போ எப்படி திடீர்னு?” கார்த்திக் குரலில் சற்றே பீதி படர்ந்திருந்தது.
“அதெல்லாம் முதல்லயே இருந்திருக்கும். நாம கவனிச்சிருக்க மாட்டோம்.” என்றான் சிவா.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சிகளுக்கு நடுவே பிறந்து வளர்ந்த அவர்களுக்கு மாய மந்திரம் மேல் எல்லாம் நம்பிக்கை இருக்க நியாயமில்லாததால் சிவாவின் வார்த்தைகளை அப்படியே ஆமோதித்தனர்.
“சரி… அதுல என்ன எழுதி இருக்குன்னு புரியுதா?” கேசவன் கேள்விக்கு பதிலளித்த ரமேஷ்,
“எழுத்து எல்லாம் தமிழ் எழுத்து தான். ஆனா வார்த்தைகள் எல்லாம் ஒண்ணும் புரியற மாதிரியே இல்லையே!” என்றான்.
“குத்துமதிப்பா பார்த்தா சமஸ்கிருத வார்த்தைகள் மாதிரி இருக்கு. என்ன இருக்குனு அப்படியே படி. கார்த்திக்குக்கு தான் ஹிந்தி தெரியுமே… அவனால ஏதாவது புரிஞ்சிக்க முடியுதானு பார்ப்போம்.” என்றான் சிவா.
ரமேஷ் வாசிக்கத் தொடங்கினான்…

(முதல் முறை)
“நமஸ்கரோட்டி அந்தகா நமஸ்கரோட்டி அனலா
ஜ்வாலனா நிஸூதாயிடும் ஜீவலோக”


திக்கித் திணறி வாசித்து முடித்து விட்டு ஏதாவது புரிகிறதா என்பது போல் கார்த்திக்கைப் பார்த்தான். சிந்திப்பது போல் நெற்றியை சுருக்கி கொண்டு, “இன்னொரு தடவ வாசி” என்றான் ரமேஷிடம்.

(இரண்டாம் முறை)
“நமஸ்கரோட்டி அந்தகா நமஸ்கரோட்டி அனலா
ஜ்வாலனா நிஸூதாயிடும் ஜீவலோக”


“இப்போவாச்சும் புரிஞ்சுதா?” நக்கலாகக் கேட்டான் ரமேஷ்.
“ஏதோ சாமி கும்பிடற மாதிரி வார்த்தைகள் வருது. ரொம்ப clear-ஆ ஒண்ணும் புரியல.” என்றான் கார்த்திக்.
“டேய்.... சும்மா scene போடாத. Sankskrit தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லு.” கலாய்க்கத் தொடங்கினான் கேசவன்.
“ரொம்ப எல்லாம் தெரியாது டா… சின்ன வயசுல கொஞ்சம் படிச்சது.” சமாளித்தான் கார்த்திக்.
ரமேஷ் தொடர்ந்தான், “இதோ பார்… இன்னும் ஒரே ஒரு தடவ வாசிச்சுக் காட்டுறேன். மரியாதையா அர்த்தம் சொல்லு…”.

அவன் அப்படிச் சொன்னதும் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த இடத்தில் திடீரென்று பலமாகக் காற்று வீசியது. சில நிமிடங்களுக்கு கடல் அலைகளும் பெரிதாக எழுந்தன. சற்றும் எதிர்பார்க்காமல் நடந்த இந்த குழப்பத்தில் மந்திரப் பெட்டி ரமேஷின் கையிலிருந்து தவறி விழுந்தது. ஒரு நொடி அவர்களுக்கு பயம் ஏற்பட்டாலும் சமாளித்துக் கொண்டு என்னவென்று ஆராய முற்பட்டனர். ஆனால் ஓரிரு நிமிடங்களில் காற்றும் கடலும் அடங்கி பழையபடி அமைதி திரும்பியது.

“என்ன ஆச்சு திடீர்னு?” என்று சிவா கேட்க,
“அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம். முதல்ல நம்ம கார்த்திக்கு உண்மையிலேயே sankskrit தெரியுமானு பார்க்கலாம்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் கேசவன்.

நண்பனைக் கேலி பேசும் வேகத்தில் இருந்த அவர்களுக்கு இயற்கை கொடுத்த எச்சரிக்கை விளங்கவில்லை. நடந்த குழப்பத்தில் படகின் ஒரு மூலையில் போய் விழுந்து கிடந்த மந்திரப் பெட்டியை மீண்டும் எடுத்து வந்தான் ரமேஷ்.
“மச்சான்… சொன்னது நெனவிருக்கு இல்ல... this is your last chance!” என்று கார்த்திக்கிடம் சொல்லி விட்டு மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினான்.

(மூன்றாம் முறை)
“நமஸ்கரோட்டி அந்தகா நமஸ்கரோட்டி அனலா
ஜ்வாலனா நிஸூதாயிடும் ஜீவலோக”


அவன் மந்திரத்தை உச்சரித்து முடிக்கவும் அந்த அதிசயம் நடந்தேறியது. ஒரு கணம் திகைத்துப் போனான் ரமேஷ்.
“டேய்.. இங்க பாருங்கடா.”
“என்னடா மறஞ்சிருச்சு!”
“எப்படி இப்படி திடீர்னு காணாம போகும்?” “How is it possible?” “எனக்கு இங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல…”
“பயமா இருக்கு மச்சான்”

அவர்களுக்குள் கூச்சல்களும் குழப்பங்களும் மேலோங்கிக் கொண்டே போக ரமேஷ் நண்பர்களை ஆசுவாசப்படுத்தும் முயற்சியில் இறங்கினான்... பெட்டியை மீண்டும் அதே இருக்கையில் வைத்தபடி! ஆம்… மறைந்தது மந்திரப் பெட்டியல்ல… அதில் பொறிக்கப்பட்டிருந்த மந்திரச் சொற்கள் மட்டுமே! ரமேஷ் மூன்றாவது முறை மந்திரத்தைப் படித்து முடித்ததும் பெட்டியில் ஏதோ விநோத மாற்றங்கள் நிகழ்வதை உணர்ந்தான். அடுத்த சில நொடிகளில் மந்திரச் சொற்கள் இருந்த இடம் காலியாக இருப்பதைப் பார்த்துத் திகைத்தான். அதைக் கண்டு மற்ற நண்பர்களையும் பீதி ஆட்கொள்ள தன்னையும் நிதானித்துக்கொண்டு அவர்களையும் சமாதானப்படுத்தினான் ரமேஷ்.

“Friends… இப்போ ஏன் நாம இவ்வளவு பயப்படறோம்.”
“பின்ன என்னடா பண்ணச் சொல்ற? முதல்ல பெட்டிய திறந்தப்ப உள்ள ஒண்ணுமே இல்ல. திடீர்னு ஏதோ எழுத்து எல்லாம் வந்துச்சு. கொஞ்ச நேரத்துல அதுவே காணாம போயிடுச்சு. பயப்படாம என்ன பண்ண முடியும். இந்த பெட்டிக்குள்ள பேய் பிசாசு ஏதாவது இருக்குமோ? பேசாம தூக்கி இத கடலுக்குள்ளேயே போட்டுட்டு போயிடலாம் டா.” பயத்தில் உளறிக் கொட்டினான் கார்த்திக்.
ரமேஷ் தொடர்ந்தான், “கார்த்திக், idiot மாதிரி பேசாத. இதுல பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்ல. இது ஒண்ணும் இந்த உலகத்துல நடக்க முடியாத விஷயம் இல்லியே. நாம invisible ink பத்தி படிச்சது இல்ல. அது மாதிரி கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ராஜா காலத்துல use பண்ண technique-ஆ இருக்கும் இது.”

நண்பர்களை ஏறிட்டு பார்த்தான் ரமேஷ். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. அவர்கள் யாரும் சமாதானமடையவில்லை என்பதை அவர்கள் முகம் தெளிவாகச் சொல்லியது.
“Come on guys. It is a kind of Steganography.” முயற்சியைத் தொடர்ந்தான் ரமேஷ்.
“இதக் கொண்டு போய் நம்ம lab-ல குடுத்தா ரெண்டு மூணு வாரத்துல இத பத்தின மொத்த details-உம் அக்கு வேற ஆணி வேற புட்டு புட்டு வைக்கப் போறாங்க. இப்போ நாம எதுக்கு தேவை இல்லாம கவலப் பட்டுட்டு இருக்கோம். Come on. Lets go!” படகைக் கரையை நோக்கி திருப்பும் முயற்சியில் இறங்கினான் ரமேஷ்.

மற்ற நண்பர்களுக்கும் ரமேஷ் பேச்சில் ஏதோ உண்மை இருப்பதாகவே தோன்ற சற்று சமாதானம் அடைந்தனர். படகு கரையை நோக்கி முன்னேறத் தொடங்கியது. கதிரவன் தன் கடைசிப் பார்வையை வீசிவிட்டு முழுவதுமாய் கடலுக்குள் மூழ்கினான்.


மந்திரப் பெட்டி - 3

Tuesday, August 10, 2010

மந்திரப் பெட்டி - 1

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்… ஒரு நாள்… அந்திப் பொழுது!

பரந்து விரிந்த வனம்… நன்கு ஓங்கி உயர்ந்த மரங்களும் செடி கொடிகளும் புற்களும் வனத்தின் அடர்த்தியை பறைசாற்றிய படி நின்றன.பகலிலேயே இருண்டு கிடக்கும் இவ்வனம் இரவு நெருங்குகையில் பார்ப்பதற்கு சற்றே அச்சமளிப்பதாகவே இருந்தது. குறுக்கும் நெடுக்குமாக பறந்து கொண்டிருந்த வவ்வால்களும் அவ்வப்பொழுது கேட்ட ஆந்தைகளின் அலறல்களும் வன விலங்குகளின் கூச்சல்களும் எரியும் அச்சத்தில் எண்ணை ஊற்றின. மற்றபடி இரவு நேர பூச்சிகளின் ரீங்காரத்தை தவிர வேறு சப்தங்களின்றி அவ்வனத்தைப் போலவே அமைதியும் பரவி இருந்தது.

யாருமற்ற வனத்தில் யாரை முறைப்பதென்று தெரியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆந்தை ஒன்று திடீரென்று மெல்லிய ஒலியொன்று கேட்க சுற்றும் முற்றும் பார்த்தது. குதிரைகளின் குளம்படி ஓசை அது. நொடிகள் பெருகப் பெருக சத்தமும் பெருகிக் கொண்டே வந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் வனத்தின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு வெண்புரவிகள் இரண்டு கடந்து சென்றன. அப்புரவிகளின் அகண்ட தலைப்பகுதியும் நீண்ட வாலும் அவைகளை அரேபியக் குதிரைகளாக அடையாளம் காட்டின. பாதை இல்லாத காட்டில் மிக லாவகமாக கற்களையும் முட்களையும் கடந்து விரைந்து சென்றன புரவிகள் இரண்டும். அது குதிரைகளின் திறமையால் மட்டுமல்ல… அவற்றை செலுத்திய வீரர்களின் திறமையும் மெச்சப்பட வேண்டும்.

சிறிது தூர பயணத்திற்கு பின் புரவிகளின் வேகம் குறைந்தது. வீரர்கள் இருவருக்கும் சம்பாஷணை தொடங்கியது.
“நகுலா!”
“சொல் தீரா…”
“அதோ அந்த பள்ளத்தில் ஒரு விளக்கொளி தெரிகிறதே… அங்கு தான் நாம் செல்ல வேண்டும்.”

தீரன் காட்டிய திக்கில் குடில் ஒன்று மங்கலாகத் தெரிந்தது. உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்கொளியில் ஆள் நடமாட்டம் இருப்பதும் புலப்பட்டது. இத்தகைய அடர்ந்த காட்டில் குடில் அமைத்து தனியே தங்கிக் கொண்டிருப்பவருக்கு நெஞ்சுரம் மிதமிஞ்சியே இருக்கவேண்டும்.

சுத்தமான குடிலும் அதைச் சுற்றி அமைந்திருந்த தோட்டமும் மங்கலான வெளிச்சத்திலும் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. அத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த புள்ளி மான்கள் இரண்டு குதிரைகளின் குழம்படி ஓசை கேட்டு மிரண்டு மின்னலெனப் பாய்ந்து புதருக்குள் சென்று மறைந்தன. நகுலனும் தீரனும் தங்கள் புரவிகளை குடிலுக்கு வெளியே நிறுத்தி விட்டு வாசலை நோக்கி நடந்தனர்.

சத்தம் கேட்டு குடிலை விட்டு வெளியே வந்த சீடனிடம் நகுலன், “குருவை சந்திக்க வேண்டும். மன்னர் அனுப்பியதாகக் கூறுங்கள்” என்றான்.
“குரு தியானத்தில் இருக்கிறார். சற்று நேரம் காத்திருங்கள். தியானம் முடிந்ததும் வந்து அழைத்துச் செல்கிறேன்.” என்றான் சீடன்.
நகுலனும் தீரனும் திண்ணையில் அமர்ந்தனர்.

தியானத்தில் இருக்கும் குருவின் பெயர் கொடுமுடியான். முல்லைப்பந்தல் சிற்றரசின் கீழுள்ள வனத்தில் வசிக்கும் ஒரு பெரிய மந்திரவாதி. முல்லைப்பந்தலின் மன்னன் முல்லை வேந்தனுக்கு “பல விதங்களில்” உதவி புரிந்து வந்ததால் நாட்டு மக்களும் அரசு பணியாளர்களும் மன்னனுக்கு கொடுக்கும் மரியாதையை கொடுமுடியானுக்கும் கொடுக்க வேண்டுமென்பது அரசகட்டளை. மரியாதை இருக்கிறதோ இல்லையோ… மக்களுக்கு இவன் மேல் மிகுந்த பயம் இருந்தது. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை… கொடுமுடியானின் மந்திர சக்தி அப்படி.

உள்ளே சென்ற சீடன் ஒரு நாழிகை கழித்து வெளியே வந்து இருவரையும் உள்ளே வருமாறு அழைத்தான். குடிலின் வெளித் தோற்றத்திற்கு சிறிதும் சம்பந்தமின்றி உட்புறம் அப்படியொரு கோரக்காட்சி அளித்தது. சுற்றிலும் மண்டை ஓடுகள்… தரை எங்கும் சிந்தி இருந்த சாம்பல் மற்றும் பிறபூஜைப் பொருட்கள்… குடிலின் நடுவே யாகம் வளர்க்க வெட்டப்பட்ட குழி… அனைத்திற்கும் மேலாக ஆங்காங்கே தெரித்திருந்த பலியிடப்பட்ட விலங்குகளின் (சமயத்தில் மனிதர்களும்) உறைந்த குருதித் துளிகள்! போர் வீரர்களான நகுலனுக்கும் தீரனுக்கும் கூட அந்தக் காட்சி மயிர்க்கூச்செறியச் செய்தது. நிதானித்துக் கொண்டு இருவரும் கொடுமுடியானுக்கு தங்கள் வணக்கங்களைச் செலுத்தினர். பின்னர் தீரன் தன் கச்சிலிருந்து ஓலைச் சுவடி ஒன்றை எடுத்து கொடுமுடியானிடம் கொடுத்தான்.

முல்லை வேந்தன் கொடுமுடியானுக்கு வரைந்திருந்த அவ்வோலையில்,
“மதிப்பிற்குரிய குருவிற்கு முல்லை வேந்தனின் வந்தனம்.
இந்த ஓலையைக் கொண்டு வரும் நகுலனும் தீரனும் என் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். தாங்கள் எவ்வித ஐயமும் இன்றி இவர்களிடம் மந்திரப் பெட்டியைக் கொடுத்து அனுப்பலாம்.” என்று எழுதி அரசு முத்திரையும் பதிக்கப்பட்டு இருந்தது. அதைப் படித்து விட்டு கொடுமுடியான் நிமிர்ந்து இருவரையும் பார்த்தான். தீரன் பேசத் தொடங்கினான்.
“எனது பெயர் தீரன். இவன் நகுலன்.”
“நல்லது. மன்னரின் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்றால்… தாங்கள் வந்துள்ள காரியம் பற்றி முழுமையும் அறிவீர்களா?” – கொடுமுடியான்.
நகுலன் தொடர்ந்தான், “மந்திரப் பெட்டியின் பயனைப் பற்றி அறிவோம். ஆனால் எதற்காக மன்னர் இந்த ஏற்பாடு செய்கிறார் என்பது பற்றி நாங்கள் அறியோம்.”
“அது நானும் மன்னனும் மட்டுமே அறிந்த ராஜ ரகசியம். அதை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அறிந்து கொள்ள ஆசைப்பட்டால் கூட உங்கள் சிரம் சின்னாபின்னாமாகி விடும்.” என்று கூறி கொடுமுடியான் நிமிர்ந்து பார்க்க “புரிகிறது!” என்பது போல் இருவரும் தலையசைத்தனர்.

அவர்கள் சம்பாஷணையை தொடரும் முன் மந்திரப் பெட்டியின் காரண காரியத்தை அறிந்து கொள்வோம். இந்த மந்திரப் பெட்டியின் முக்கிய குறிக்கோளே அழிவு தான்! ஏதோ ஒரு பெரிய திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டே முல்லை வேந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க கொடுமுடியான் இந்த மந்திரப் பெட்டியை செய்துள்ளான். கொடுமுடியானின் மந்திர சக்தியின் உதவியினால் விற்போர், வாட்போர், மற்போர் என எப்போரும் புரியாமல் “கத்தியின்றி ரத்தமின்றி” ஒரு பெரிய நிலப் பரப்பை புல் பூண்டு முளைக்கக் கூட வகை இல்லாமல் செய்து விடவே இந்தப் பெட்டி!

கொடுமுடியான் மந்திரப் பெட்டியை எடுத்து நகுலன் மற்றும் தீரனிடம் காட்டினான். பொன்னிறத்தில் மின்னிய அந்தப் பெட்டி அவர்கள் எண்ணியதை விட சற்று பெரிதாகவே இருந்தது. ஓரடிக்கு மேல் நீளமும் ஐந்தாறு அங்குல அகலமும் பெற்றிருந்த அப்பெட்டி விளக்கொளியின் வெளிச்சத்தில் காண்பவரின் கண்களுக்கு ஜாலம் காட்டியது. பிரமிப்பின் மிகுதியில் இருந்த இருவருக்கும் கொடுமுடியான் மந்திரப் பெட்டியை உபயோகிக்கும் முறையை விளக்கத் தொடங்கினான்.
“இந்தப் பெட்டியை குறிப்பிட்ட இடத்தில் வைத்து திறந்து கதிரவன் ஒளி இதன் மேல் படும்படி வைத்தால் சில நொடிகளில் இதனுள்ளே நான் செதுக்கியுள்ள மந்திரம் கண்களுக்கு புலப்படும். அதை வாய்விட்டு மும்முறை ஜபித்தால் இப்பெட்டி அவ்விடத்திலிருந்து மாயமாய் மறைந்துவிடும். மறைந்த மறு நொடி அவ்விடத்தில் அழிவு தொடங்கும். நம் மன்னரின் வெற்றியும் தொடங்கும்!!!” – இதை சொல்லும் பொழுது கொடுமுடியானின் கண்களில் கொலை வெறி தாண்டவமாடியது. அவன் ஆனந்தத்தின் எல்லையில் அந்தக் காடே அதிர்ந்து போகும்படி சிரித்த சத்தமும் அவனது கறை படிந்த கோரப்பற்களும் நகுலனுக்கும் தீரனுக்கும் உள்ளுக்குள் பீதியைக் கிளப்பின.
கொடுமுடியான் தொடர்ந்தான், “இந்த மந்திரப் பெட்டி தற்சமயம் சில காத தூர சுற்றளவை அழிக்கும் சக்தி மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் இதன் சக்தி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகும். மன்னனின் திட்டம் முழு வெற்றி பெற வேண்டுமென்றால் இதை இன்றிலிருந்து சரியாக முப்பது நாட்கள் கழித்து உபயோகப் படுத்த வேண்டும்.”
நகுலன் இடைமறித்தான், “நாளுக்கு நாள் இதன் சக்தி பெருகும் என்றால் இதை மன்னர் உபயோகப்படுத்தத் தவறி விட்டால் என்ன ஆகும்?”
கொடுமுடியான், “இப்பெட்டியை உபயோகப்படுத்தும் முடிவை கைவிட்டாலோ அல்லது காலம் கடத்தி உபயோகிக்க நினைத்தாலோ சிறிதும் தாமதமின்றி இதை என்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அப்படியே விட்டு விட்டால் இன்னும் ஒரு வருட காலத்திற்குள் இவ்வுலகையே அழிக்கும் சக்தியை இது பெற்று விடும்.”
தீரன் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “குருவே, எதற்காக இந்த விஷப் பரிட்சை?” என்று கேட்டான்.
கொடுமுடியான் கோபக்கனல் தெறிக்க தீரனைப் பார்த்து, “மூடனே! சொல்வதை மட்டும் செய். என்னை கேள்வி கேட்காதே.” எனக் கூவ நகுலனுக்கும் தீரனுக்கும் சப்த நாடியும் அடங்கியது. அமைதியாக மந்திரப் பெட்டியை வாங்கி தீரன் தன் இடைக்கச்சில் சொருகிக்கொண்டான்.பின்னர் கொடுமுடியானிடம் விடை பெற்றுக் கொண்டு இருவரும் அரண்மனை நோக்கி கிளம்பினர். அவர்கள் கிளம்பிய நேரம் நன்றாக இருள் சூழ்ந்து கொண்டது. இருவரும் கையில் தீப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டு மெதுவாக புரவிகளை நடத்திச் சென்றனர்.

இருவரும் அமைதியாக சென்று கொண்டிருந்தனர். வனத்தைக் கடந்து ஒரு ஆற்றங்கரையை அடைந்ததும் புரவிகளை விட்டு இறங்கி மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள். இரவின் கருமை அப்பியிருந்த நீர்ப்பரப்பில் பிறை நிலவின் பிம்பம் அழகாக பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதை ரசிக்கும் மன நிலையில் இருவருமே இல்லை. அவர்கள் மனதில் குழப்பம் நிறைந்து இருந்தது. என்னன்னவோ எண்ணங்கள் வந்து அவர்கள் உள்ளத்தின் அமைதியை கெடுத்துக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு பெரிய ஆபத்து தங்களை சூழ்ந்து கொள்ளப் போவது போன்றதொரு எண்ணம் அவர்களை உறுத்திக் கொண்டே இருந்தது. இப்பெட்டியை மன்னரிடம் கொண்டு சேர்ப்பது சரியா என்று யோசிக்கத் தொடங்கினான் நகுலன். தீரனையும் நேரடியாகவே கேட்டு விட்டான்.
“தீரா, நாம் இதை மன்னரிடம் கொண்டு சேர்ப்பது எனக்கு நல்லதெனத் தோன்றவில்லை. உலகத்தின் அழிவு நம் மூலமாக தொடங்கி விடுமென உள்மனது உறுத்துகிறது.”
“எனக்கும் அதே எண்ணம் தான் நகுலா. ஆனால் இப்போது நமக்கு வேறு வழியே இல்லையே.”
“ஏன் இப்படிச் சொல்கிறாய்?”
“சிந்தித்துப் பார். இப்பெட்டியினால் ஏற்படப் போகும் அழிவினைத் தடுக்க கொடுமுடியானால் மட்டுமே முடியும். நாம் இதை எங்கு ஒளித்து வைத்தாலும் கொடுமுடியான் தன் மந்திர சக்தி கொண்டு சுலபமாகக் கண்டுபிடித்து விடுவான். அப்படியே அவன் கண்டுபிடிக்கத் தவறினாலும் சில வருடங்கள் கழித்து இதை யாரேனும் கண்டெடுத்தால் அந்த நேரத்தில் அழிவு மிகப் பெரியதாய் இருக்கும். எனவே தான் சொன்னேன் நமக்கு இதை மன்னரிடம் கொண்டு சேர்ப்பதைத் தவிர வேறு வழி இல்லையென்று.”
அவர்களது இயலாமை அவர்களுக்கு எரிச்சலை மூட்டியது.
“மரணம் நம்மை நெருங்குவது போலவே உணர்கிறேன்.” என சலித்துக் கொண்டான் நகுலன்.
“அதை விடு நகுலா. நம்மால் இயலாததைப் பற்றிப் பேசி எவ்விதப் பயனும் இல்லை.”

சிறிது இடைவெளி விட்டு தீரன் தொடர்ந்தான், “நகுலா, நாம் ஆற்றைக் கடந்து அக்கரை சென்று விட்டால் விடிவதற்குள் அரண்மனை சென்று சேர்ந்து விடலாம். மலையைச் சுற்றி சென்றால் நாளை மதியம் தான் அரண்மனை செல்ல முடியும்.”
தீரனுக்கும் நெடு நேரம் பயணம் செல்ல விருப்பம் இல்லாததால் இருவரும் தத்தம் புரவியில் ஏறிக் கொண்டனர். புரவியின் பிடரியை இறுகக் கட்டிக்கொண்டு அமர்ந்து அவைகளை ஆற்றுக்குள் இறக்கினர். ஆற்று நீர் சில்லென்று மேலே பட்டதும் இருவருக்கும் ஒரு நொடி புல்லரித்தது. நீரின் மேல் குதிரைப் பயணம் அவர்களுக்கு சற்று ஆனந்தத்தை அளித்தது. அந்த நேரத்தில் அந்த ஆனந்தம் அவர்களுக்கு அவசியமாகவே இருந்தது. ஆனால் அந்த ஆனந்தம் கூட நெடு நேரம் நிலைக்கவில்லை அவர்களுக்கு. சிறிது சிறிதாக ஆற்று நீரின் வேகம் அதிகரிப்பதை இருவரும் உணர்ந்தார்கள்.
“தீரா, நீரின் வேகம் அதிகமாகிக் கொண்டே போகிறது. குதிரை நீந்துவதற்கு கஷ்டப்படுகிறது. இதற்கு மேல் செல்வது ஆபத்து. கரைக்கு திரும்பி மலையைச் சுற்றியே சென்று விடலாம்.”
“எனக்கும் அதுவே சரியெனப் படுகிறது. வா… திரும்பி விடலாம்.”
ஆனால் திரும்பிச் செல்வதும் அவர்களுக்கு சுலபமாக இல்லை. நீரின் வேகத்தை மீறி திரும்புவது குதிரைகளுக்கு சாத்தியப்படவில்லை. நீரின் போக்கில் செல்லத் துவங்கின குதிரைகள் இரண்டும். தீரனின் குதிரை தன்னை விட்டு விலகிச் சென்று கொண்டிருப்பதைக் கண்ட நகுலன்,
“தீரா, நம்மையும் சுமந்து கொண்டு நீந்துவதற்கு குதிரைகள் திணறுகின்றன. நாம் இறங்கி நீந்திச் சென்று கரையை அடைவோம். குதிரைகள் வந்துசேர்ந்து விடும்.” என அடி வயிற்றிலிருந்து கத்தினான்.

அவனது குரல் தீரனைச் சென்று அடைந்ததா என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. சென்று அடைந்திருந்தாலும் எந்தப் பயனும் இல்லை. திடீரென்று தோன்றிய காட்டாற்று வெள்ளத்தில் தவணை முறையில் கூடிக் கொண்டிருந்த நீரின் வேகம் நொடிப் பொழுதில் உச்சத்தை அடைந்தது. அவர்கள் தானாக குதிரையை விட்டு இறங்கும் முன் காட்டாற்று வெள்ளம் இருவரையும் அடித்து நீருக்குள் தள்ளியது. கண்ணிமைக்கும் நேரத்தில் குதிரைகளை விட்டு வீசி எறியப்பட்ட நகுலனும் தீரனும் ஆற்றின் அடி ஆழம் வரை அமிழ்த்தப்பட்டனர். நீருக்கடியில் போராடிக் கொண்டிருக்கையில் திடீரென ஏதோ நினைவுக்கு வந்தவன் போல் தீரன் தன் இடைக்கச்சில் கை வைக்க மந்திரப் பெட்டியைக் காணவில்லை. உலகத்தின் அழிவிற்கு விதை போட்டுவிட்ட குற்ற உணர்ச்சி அவன் மனதை அரிக்க காட்டாற்று வெள்ளம் அவன் உயிரை அரித்தது. சற்று நேரத்தில் இருவரின் உயிர்களும் நீரில் கரைந்து உடல்கள் சடலங்கலாய் நீர்ப்பரப்பில் மிதந்தன.


மந்திரப் பெட்டி - 2